ஸ்பெக்ட்ரம்: எந்த முறைகேடும் நடக்கவில்லை! -தீர்ப்பாயம்
சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தில் தெல்போன் மற்றும் இதர தொலைத் தொடர்பு சேவைகளை அளித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத்துக்கும், டாடா தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் ஜிஎஸ்எம் சேவை வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
சிடிஎம்ஏ முறையில் செல்போன் சேவை வழங்குபவர்களுக்கு ஜிஎஸ்எம் சேவை உரிமையை வழங்குவதற்கு ஏதுவாக இந்திய தொலைத் தொடர்பு கொள்கையும் திருத்தியமைக்கப்பட்டது. இதனை கடுமையாக எதிர்த்த இதர செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள், தீர்ப்பாயத்தில் முறையிட்டன.
செல்போன் ஆபரேட்டர் சங்கத்தின் மூலம் தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த இந்திய தொலைத் தொடர்பு தகராறுகளைத் தீர்த்து வைக்கும் தீர்ப்பாயம், இப்படிக் கூறியுள்ளது:
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் தொலைத் தொடர்புத் துறை பின்பற்றிய நடைமுறைகளில் குறைசொல்ல ஒன்றுமில்லை. கடந்த அக்டோபர் 19, 2007 அன்று இந்தியத் தொலைத் தொடர்புத் துறை பிறப்பித்த உத்தரவால், மற்ற ஜிஎஸ்எம் ஆபரேட்டர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுவதை ஏற்பதற்கில்லை.
1999-ம் ஆண்டைய தேசிய தொலைத் தொடர்புக் கொள்கைப்படி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் 15 மெகாஹெர்ட்ஸ் வரை பயன்படுத்திக் கொள்ள தங்களுக்கு உரிமையுள்ளதாக செல்போன் ஆப்ரேட்டர்கள் சங்கத்தினர் கூறுவதையும் ஏற்க முடியாது.
மேலும் இரட்டைத் தொழில் நுட்ப முறையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்குவது புதிய விஷயமல்லை. ஏற்கெனவே நடைுறையில் உள்ள ஒன்றே. 1999-ம் ஆண்டின் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையே இதற்கு வழிவகை செய்துள்ளது.
இந்த விஷயத்தில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், 'ட்ராய்' பக்கம் சில தவறுகள் உள்ளன. தொழில்நுட்ப நடுநிலையை விளக்கிக் கூறுவதில் அவர்கள் போதிய அக்கறை காட்டவில்லை, என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.