சேது பந்த்: கருணாநிதி மீது ஜெ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிடக் கோரி திமுக சார்பில் 2007ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்த திமுக அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் பந்த் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதிமுக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அதை உண்ணாவிரதப் போராட்டமாக திமுக அறிவித்தது. அதன்படி அக்டோபர் 1ம் தேதி சென்னையில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர். சிறிது நேரத்தில் கருணாநிதி அங்கிருந்து சென்று விட்டார். இருப்பினும் மாநிலம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரதப் போராட்டம் என அழைக்கப்பட்டாலும் கூட தமிழகம் முழுவதும் அன்று பிற்பகல் வரை பஸ்கள் ஓடவில்லை. மாலை வரை கடைகளும் திறக்கப்படவில்லை. கிட்டத்தட்ட பந்த் போலவே காணப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநில போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 6 பேர் மீது அதிமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்ததது.
இந்த வழக்கு நீதிபதிகள் அகர்வால், சிங்வி ஆகியோரால் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், தனது குற்றச்சாட்டை அதிமுக நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
அதே போல சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் விமர்சித்துப் பேசியதாக மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு மீதும் ஜெயலலிதா அவமதி்ப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.