பொறுப்பை தட்டிக் கழிக்கும் கருணாநிதி- நெடுமாறன்
சென்னை: தனி ஈழம் அமைய வேண்டும் என்பதில் தனக்கிருக்கும் பொறுப்பை தமிழக முதல்வர் தட்டி கழித்து வருகிறார் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் மக்கள் வாக்களித்து ஜனநாயக ரீதியில் தமிழ் ஈழம் உருவானால் அதைப் பார்த்து என்னைவிட அதிக மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இலங்கை தமிழருக்காக கடந்த 50 ஆண்டுகளாக உழைத்து வருவதாக கூறும் அவருக்கு இலங்கை மக்கள் தொகையில் 70 சதவீதம் சிங்களர்கள் என்பது தெரியாதா. அங்கு தமிழர்கள் வெறும் 30 சதவீதம் பேர் தான் உள்ளதை அவர் மறந்துவிட்டாரா?
ஈழத் தமிழ் மக்களிடையே வாக்கெடுப்பு என்று கூறுவதற்கு பதிலாக இலங்கை மக்களிடையே வாக்கெடுப்பு என்று சொல்வது பிரச்னையை வேண்டுமென்றே குழப்பும் நோக்கத்தில் அமைந்துள்ளது.
1977ம் ஆண்டு நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஈழப் பிரச்னை முன்வைக்கப்பட்டு பெருவாரியான தமிழர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதற்குப் பின் நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் ஈழ ஆதரவு வேட்பாளர்களையே தமிழர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர்.
சிங்கள கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழர் பகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
தனி ஈழம் வேண்டும் என ஈழத்தமிழர்கள் தேர்தல் மூலம் பலமுறை தீர்ப்பளித்திருப்பதை ஏற்று அதற்கு அங்கீகாரம் தர இந்திய அரசு முன்வர வேண்டும் என வற்புறுத்த வேண்டியது முதல்வர் கருணாநிதியின் பொறுப்பு. அதை தட்டிக் கழிக்கும் வகையில் செயல்படும் அவரை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார் நெடுமாறன்.