பங்கு வர்த்தகம்: துள்ளி விளையாடும் காளை!
வாரத்தின் முதல்நாளான திங்களன்று கிட்டத்தட்ட 500 புள்ளிகளை இழந்ததால் பலத்த அடிவாங்கிய இந்திய பங்குச் சந்தையில், கடந்த இரு தினங்களாக நிலையான பங்கு வர்த்தகம் நடந்தது.
இன்று எடுத்த எடுப்பிலேயே எகிறியது பங்குச் சந்தை குறியீட்டெண்கள். ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்திலுமே நல்ல வர்த்தகம் நடப்பதால், அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் 350 புள்ளிகளுக்கும் கூடுதலாக, சென்செக்ஸில் வர்த்தகம் களைகட்டியது.
மீண்டும் 10 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த நிலையில், பிற்பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 434 புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது.
130 புள்ளிகள் உயர்ந்துதன் மூலம், 3200 புள்ளிகளைத் தொட்டுக் கொண்டுள்ளது நிப்டி.
டாடா மோட்டார்ஸ், டிஎல்எப், சுஸ்லான் எனர்ஜி, ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் இன்ப்ரா போன்றவை நிப்டியில் இன்று நல்ல லாபத்தில் கைமாறின.
இதர ஆசியப் பங்குச் சந்தைகளான ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்க்செங், சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், தென் கொரியாவின் கோப்ஸி போன்றவற்றிலும் இன்று நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.