வெல்லிங்டன்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டு நாளை நியூசிலாந்தில் துவங்குகிறது. இதில் குறைந்தபட்சம் டிரா செய்தால் கூட இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 41 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றி சாதிக்கலாம்.நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு டெஸ்டின் முடிவில் இந்தியா தொடரில் 1-0 என்ற முன்னிலையில் இருக்கிறது.இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை வெல்லிங்டனில் நடக்கிறது. இரண்டாவது போட்டியில் முதுகு வலி காரணமாக விளையாடாத டோணி இப்போட்டியில் களமிறங்க இருக்கிறார். இதையடுத்து தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார் என தெரிகிறது.ஷேவக் இரண்டாவது டெஸ்டில் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. இம்முறை அவர் வெல்லிங்டனில் நியூசிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்குவார் என எதிர்பார்க்கலாம். இவருடன் துவக்க வீரராக வரும் கம்பீர் நிலைத்து நின்று அணிக்கு கைகொடுத்து வருகிறார்.சச்சின் இத்தொடரில் மூன்று இன்னிங்சில் 273 ரன்கள் எடுத்து சூப்பர் பார்மில் இருக்கிறார். லட்சுமண் (230), டிராவிட் (219) ஆகியோரும் தங்களது அனுபவத்தை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.ஜாகிர், இஷாந்த் கூட்டணி முதல் டெஸ்டில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறச் செய்து வருகின்றனர். இதை ஞாபகத்தில் வைத்து கொண்டு நியூசிலாந்து இரண்டாவது போட்டிக்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தை அமைக்கவில்லை. மூன்றாவது போட்டியிலும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணி தொடரை கைப்பற்ற இப்போட்டியை டிரா செய்தால் கூட போதும் என்பதால் சுமார் 41 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து மண்ணில் தொடரை வெல்ல நமது அணிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.நியூசிலாந்து அணியை பொறுத்தவரை ரைடர் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். மெக்கலம், ரோஸ் டெய்லர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஆனால், பந்துவீச்சும் இந்திய பேட்ஸ்மேன்களை பெரிதாக அச்சுறுத்தவில்லை. என்றாலும் சொந்த தொடரை விட்டுகொடுக்க நியூசிலாந்து விரும்பாது என்பதால் கடும் சவால் அளிக்கும்.