ராகிங் செய்தால் எந்த கல்லூரியிலும் சேர முடியாது
சென்னை: மருத்துவ மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ராக்கிங் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் வேறு எந்த கல்லூரியிலும் சென்று படிக்க முடியாது என தமிழக அரசு சுற்றறிக்கை விட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரிகளில் ராகிங் வெகு சகஜமாக இருந்தது. ராகிங் வெறி செயலாக மாறி சில உயிர்கள் பலியானதை அடுத்து அவை பெருமளவு அழிக்கப்பட்டது.
இந்நிலையில் இமாச்சல பிரேதசத்தில் ஒரு மாணவன் ராகிங் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்சநீதி மன்றம் கல்லூரிகளில் ராகிங்கை முழுமையாக அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய குழுவுக்கு (யுஜிசி)உத்தரவிட்டது.
இதையடுத்து யுஜிசி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் கூறுகையில்,
ராக்கிங் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டு, அது தற்போது நடைமுறையில் உள்ளது.
கடந்த ஆண்டு ராக்கிங் தொடர்பாக சில மாணவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் ராக்கிங் நடக்காமல் இருக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவை செயல்பாட்டில் உள்ளன. நடவடிக்கை கடுமையாக இருப்பதால் கடந்த ஆண்டே ராக்கிங் குறைந்துவிட்டது.
இருப்பினும் ராக்கிங் நடைபெறாமல் தடுக்க, முன் எச்சரிக்கையாக, சுற்றறிக்கை விடப்படும். இது அனைத்து மருத்துவ கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகள் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட உள்ளது.
இதற்காக கல்லூரிகளும், விடுதிகளும் கடுமையாக கண்காணிக்கப்படும். ராக்கிங் யார் செய்தாலும் எந்த பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ராக்கிங் நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் அந்த கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள். அதுமட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் எந்த கல்வி நிறுவனங்களிலும் சேரமுடியாத நிலை ஏற்படும் என்றார் சுப்புராஜ்.
கல்லூரி முதல்வர் தான் பொறுப்பு...
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர் கூறுகையில்,
ராக்கிங் மிகப்பெரிய கொடுமையாகும். பெற்றோர்கள் தனது மகன், மகள் படித்து முடித்து வேலைபார்த்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து பார்க்கவேண்டும் என்று பல்வேறு கனவுகளோடு இருப்பார்கள்.
அந்த நிலையில் ராக்கிங் கொடுமையால், மாணவர்கள் பயந்து படிப்பை நிறுத்தநேரிடலாம். அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படாலாம். அப்படிப்பட்ட செயல் இப்போது தமிழ்நாட்டில் குறைந்து விட்டது. இனிமேல் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ராக்கிங் நடைபெறாது என்று கருதுகிறேன்.
கடந்த ஆண்டே இது குறித்து ஒவ்வொரு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வருக்கும் கடிதம் எழுதி உள்ளோம். ராக்கிங் நடந்தால் முதல்வர்தான் பொறுப்பு ஆகும். அதுமட்டுமல்ல இந்த ஆண்டும் மாணவர்கள் சேரும்போது ராக்கிங்கில் ஈடுபடமாட்டேன் என்று கடிதம் எழுதி கொடுக்கவேண்டும்.
அதுமட்டுமல்ல பெற்றோரும் கடிதம் எழுதி கொடுக்கவேண்டும். நான் அண்ணா பல்கலைக்கழக விடுதிக்கு அவ்வப்போது சென்று பார்வையிட்டு வருகிறேன்.
ராக்கிங்கை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் வருகிற கல்வி ஆண்டும் எடுக்கப்பட உள்ளது. இது அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் விளக்கமாக சுற்றறிக்கை அனுப்ப உள்ளோம்.
மாணவர்கள் கல்வி கற்கத்தான் கல்லூரிக்கு வருகிறோம் என்ற நினைப்பு மட்டுமே இருக்கவேண்டும். எனவே ராக்கிங் இல்லாத ஆண்டாக வருகிற எல்லா ஆண்டுகளும் அமையவேண்டும். இதற்கு பெற்றோர்கள் தங்கள் மகன்கள், மகள்களுக்கு தக்க அறிவுரை வழங்கவேண்டும்.
ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் கடும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் படிக்க முடியாது என்றார் மன்னர் ஜவகர்.