மலேசியா: படாவி விலகினார் -பிரதமராகிறார் ரஸாக்
கடந்த ஆண்டு நடந்த மலேசியத் தேர்தலில் ஆளும் கூட்டணியான உம்னோவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சாதாரண மெஜாரிட்டியுடன்தான் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
தமிழர்கள் மீதான அடக்குமுறை நடவடிக்கை காரணமாக அவரது கட்சிக்கு பெரும் அடி விழுந்தது. இதனால் படாவி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
ஆரம்பத்தில் விலக முடியாது என பிடிவாதமாக கூறி வந்தார் படாவி. இருப்பினும், பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டு விரைவில் பதவி விலகுவேன், நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவியேற்பார் என்று அறிவித்தார் படாவி.
அதன்படி சமீபத்தில் அவர் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நஜீப் ரஸாக் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனது பிரதமர் பதவியையும் படாவி ராஜினாமா செய்துள்ளார். இதை அந்த நாட்டு மன்னர் ஏற்றுக் கொண்டு விட்டார்.
இதைத் தொடர்ந்து ரஸாக் பிரதமராக வழி ஏற்பட்டுள்ளது.
1957ம் ஆண்டு முதலே உம்னோ கூட்டணிதான் மலேசியாவில் ஆட்சி புரிந்து வருகிறது. ஆனால் கடந்த 2 வருடங்களாக படாவி தலைமையிலான உம்னோ அரசுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இந்திய வம்சாவளியினர் குறித்த பிரச்சினையை படாவி அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கியதே அந்த கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய அடிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
நாளை நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.