சிறையில் பிரேமானந்தாவுக்கு நெஞ்சுவலி
கடலூர்: கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போலி சாமியார் பிரேமானந்தாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி விராலிமலை அருகே எடமலைப்பெட்டியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா. இவர் ஆசிரமத்தில் தங்கியிருந்த பல இளம் பெண்களை கற்பழித்து, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 1997ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து பிரேமானந்தா கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சமீபத்தில் தனக்கு கண் பார்வை குறைவு ஏற்பட்டதாக தெரிவித்ததை அடுத்து அவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அறுவை சிகிச்சையின் மூலம் கண்புரை நோய் நீக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சிறையில் அவருக்கு திடீரென் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறை துறை அதிகாரிகளிடம் இதை தெரிவித்துள்ளார்.
இதையடு்த்து போலீசார் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.