மலேசிய பிரதமராக பதவியேற்றார் நஜீப் துன் ரஸாக்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் அப்துல் ரஸாக்கின் மகன்தான் நஜீப் துன் ரஸாக். இதுவரை பிரமதராக இருந்து வந்து முகம்மது அப்துல்லா படாவி பதவி விலகியதைத் தொடர்ந்து, துணை பிரதமராக இருந்து வந்த ரஸாக் பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
இன்று அவர் பதவியேற்றுக் கொண்டார். 55 வயதாகும் ரஸாக் பதவியேற்கும் விழா மலேசிய மன்னர் யாங் தி பெர்துவான் அகாங்க் துனாகு மிஸான் ஜெய்னல் அபிதினின் அரண்மனையில் நடந்தது. மன்னர் அபிதின், ரஸாக்குக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மலாய் பாரம்பரியப்படி பதவியேற்பு விழா நடைபெற்றது.
பதவி விலகிய பிரதமர் படாவி, முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பஹாங் மாகாணம், கோலாலலிபிஸ் நகரி்ல 1953ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்தவர் ரஸாக். இவரது தந்தை அப்துல் ரஸாக் ஹுசேன், மலேசியாவின் 2வது பிரதமராக இருந்தவர்.
முன்னாள் பிரதமர் ஒருவரின் மகன் பிரதமராக பதவியேற்பது மலேசியாவில் இதுவே முதல் முறையாகும்.
மலேசியாவில் மிகவும் இளம் வயதில் எம்.பி ஆன முதல் நபர் என்ற பெருமையும் ரஸாக்குக்கு உண்டு. அப்போது இவருக்கு 22 வயதுதான் ஆனது. தந்தையின் மறைவைத் தொடர்ந்து அவரது பெகான் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் ரஸாக்.