ஐ.ஜ.தளத்திலிருந்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் நீக்கம்!
பாட்னா: கட்சிக் கட்டுப்பாட்டை மீறி முசாபர்பூர் தொகுதியில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ள ஜார்ஜ் பெர்னாண்டஸ் இனியும் கட்சியில் இல்லை. அவர் நீக்கப்பட்டு விட்டார் என ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதாதளத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதை அவரது மனைவியும் நியாயப்படுத்தியிருந்தார்.
ஆனால் கட்சி முடிவை ஏற்க மறுத்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், முசாபர்பூரில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்ததன் மூலம் தானாகவே கட்சியை விட்டு விலகி விட்டார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அவருக்கும், கட்சிக்கும் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.
ஐக்கிய ஜனதாதள அலுவலகத்தில் வைத்திருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸின் படத்தையும் நீக்கி விட்டனர்.
கடந்த புதன்கிழமைதான் முசாபர்பூரில் போட்டியிட மனு தாக்கல் செய்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அவருடன் ராஜ்யசபா எம்.பி. திக்விஜய் சிங் (இவருக்கும் கட்சியில் சீட் மறுக்கப்பட்டுள்ளது), முன்னாள் பீகார் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா, முன்னாள் எம்.பி. ராம் ஜீவன் சிங் உள்ளிட்ட திரளான ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.
இதற்கிடையே, ஐக்கிய ஜனதாதளம் சார்பில் முசாபர்பூரில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் பிரகாஷ் நிஷாத்துக்கு புதுப் பிரச்சினை வெடித்துள்ளது. அவருக்கு ஆதரவு தர மாட்டோம் என கூட்டணிக் கட்சியான பாஜக அறிவித்துள்ளது.