அதிமுகவுடன் பேச்சி்ல தேக்கம்-அதிரடிக்கு தயாராகும் சிபிஎம்
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அது கேட்ட தொகுதிகளை ஒதுக்க அதிமுக மறுத்து வருகிறது. இதனால் அக்கட்சி அப்செட் ஆகியுள்ளது.
அவர்களுக்கு கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளது. இதில் அந்தக் கட்சிக்கு உடன்பாடு இல்லை. தனக்கு 4 தொகுதிகள் வேண்டும் என்று கூறும் அந்தக் கட்சி அதுவும் தான் சொல்லும் தொகுதிகளாக இருக்க வேண்டும் என்கிறது.
மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியும் கூட சிக்கல் தீரவில்லை.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் மதுரையில் இன்று மத்திய குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பான சிக்கல் குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதன்படி கேட்கும் தொகுதிகள் கிடைக்காவிட்டால் விரும்பும் தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது என்றும், மற்ற இடங்களில் அதிமுகவை ஆதரிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாநில குழுவுக்கு அதிகாரம் அளித்து கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னதாக மதிமுகவுக்காக திருப்பூரை வி்ட்டுத் தர மார்க்சிஸ்ட் முன் வந்தது. ஆனால், அதற்கு பதில் உபகாரமாக தாங்கள் கேட்கும் தொகுதிகளைத் தர வேண்டும் என்று அதிமுகவிடம் கூறிவிட்டது. இதை அதிமுக ஏற்க மறுத்தது.
அப்படியானால் திண்டுக்கல் வேண்டாம் திருப்பூரே வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீண்டும் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் சிக்கல் நீடிக்கிறது.
இவ்வாறாக பேச்சுவார்த்தை தொடரத் தொடர பிரச்சனை தீருவதற்குப் பதிலாக சிக்கல் அதிகமாகிக் கொண்டே போகிறது. இரு தரப்புமே தொகுதிகள் விஷயத்தில் முழுவதுமாக விட்டுக் கொடுத்து முதலில் இருந்து பேச்சை ஆரம்பித்தால் தான் மட்டுமே சிக்கல் தீரும் நிலை.
அந்த வேலையைச் செய்ய டெல்லியில் இருந்து மூத்த மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஜெயலலிதாவுடன் பேசி வருகின்றனர்.