கார்த்திக் கட்சி நிர்வாகிகள் திடீர் விலகல்!
தூத்துக்குடி: அகில இந்திய நாடாளும் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் கட்சியைச் சேர்ந்த நெல்லை, தூத்துக்குடி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென விலகியுள்ளனர்.
பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் கார்த்திக் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற துவக்கி, அக் கட்சியை நடத்தி வருகிறார்.
தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் இந்த கட்சிக்கு ஓரளவுக்கு ஆதரவு உள்ளது. ஆனால், கட்சியை நடத்தத் தெரியாமல் ஒவ்வொரு தேர்தலிலும் மகா குழபபம் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் கார்த்திக்.
இந் நிலையில் நெல்லை மாவட்ட செயலாளர் பாலு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் அக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இது பற்றி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது
நடிகர் கார்த்திக் மேல் கொண்ட அன்பின் காரணமாக அவரது கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றினோம். கட்சிக்காக ஏராளமான பணத்தை வீட்டில் இருந்து எடுத்து வந்து செலவு செய்து விட்டோம்.
ஆனால் கார்த்திக் கட்சியை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவில்லை. எனவே நாங்கள் கார்த்திக் கட்சியில் இருந்து விலகி பார்வர்டு பிளாக் கட்சியில் இணைய உள்ளோம் என்றனர்.