அதிமுக அணிக்கு பார்வர்ட் பிளாக் பிஸ்வாஸ் ஆதரவு
சென்னை: தமிழகத்தில் சிபிஎம் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இடம் பெற்றுள்ள அணிக்கு ஆதரவு அளிப்பதாக பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தேபப்பிரதா பிஸ்வாஸ் கூறியுள்ளார்.
சென்னை வந்த பிஸ்வாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜனை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அது இடம் பெற்றுள்ள கூட்டணிக்கும் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
செய்தியாளர்களிடம் பின்னர் பிஸ்வாஸ் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணியை நாங்கள் ஆதரிக்கிறோம். மதுரை, தேனி, விருதுநகர் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தொகுதியைத் தருமாறு கேட்டுள்ளோம்.
தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தமிழகம் உள்பட மொத்தம் 22 தொகுதிகளில் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிடுகிறது என்றார்.
பிஸ்வாஸ் கட்சியின் மாநிலத் தலைவராகத்தான் முன்பு நடிகர் கார்த்திக் இருந்து வந்தார். அப்போது அவருக்கும், சந்தானத்திற்கும் இடையே ஒத்துப் போகாததால், கட்சியை விட்டு நீக்கப்பட்டார் கார்த்திக் என்பது நினைவிருக்கலாம்.
கார்த்திக் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் அதிமுகவுடன் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்தார் சந்தானம்.
பின்னர் சந்தானமும் தனித்து செயல்பட ஆரம்பித்தார். தற்போது அவர் திமுக அணிக்குப் போய் விட்டார்.