சத்யம் மோசடி: மேலும் மூவர் கைது!
ஹைதராபாத்: சத்யம் நிறுவன மோசடியில் தொடர்புடைய மேலும் மூவரை சிபிஐ நேற்று கைது செய்துள்ளது.
சத்யம் நிதித்துறை துணைத் தலைவர் ஜி ராமகிருஷ்ணா, அதே துறையில் பணியாற்றிய அலுவலர்கள் டி வெங்கடபதி மற்றும் ஸ்ரீசைலம் ஆகியோர் இந்த மோசடியில் நேரடியாக தொடர்புடையவர்கள் என சிபிஐ கைது செய்துள்ளது.
இவர்கள்தான் ராமலிங்க ராஜுவுக்கு விசுவாசமாக இந்த மோசடிக்கான திட்டங்களை முழுமையாக வடிவமைத்துக் கொடுத்தவர்களாம்.
இதுகுறித்து சிபிஐ டிஐஜி விவி லக்ஷ்மி நாராயணா கூறியதாவது:
சத்யம் மோசடி வழக்கில் முக்கியமான மூவரைக் கைது செய்துள்ளோம். இந்த மோசடியை சரியாக வடிவமைத்துக் கொடுத்தவர்கள் இந்த மூவர்தான். எங்களது கடுமையான விசாரணையில் சீனிவாஸ் வாட்லாமணிதான் இவர்கள் பெயர்களைச் சொன்னார்.
இந்த மூவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என்றார் லக்ஷ்மி நாராயணா.
இதற்கிடையே இந்த மோசடியின் நாயகனான ராமலிங்க ராஜு உள்ளிட்டோருக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.