அதிமுக - மதிமுக பேச்சில் தொடர்ந்து இழுபறி - இன்று முடியும் என எதிர்பார்ப்பு
சென்னை: மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதிப் பங்கீட்டுக் குழப்பத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இழுபறி அப்படியே நீடிக்கிறது. இருப்பினும் இன்றைக்குள் இந்த இரு கட்சிகளின் பிரச்சினைக்கும் ஜெயலலிதா முடிவு கட்டுவார் எனத் தெரிகிறது.
மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இழுபறியாக உள்ளது. சில முறை இரு கட்சிகளின் தலைவர்களும், ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மதிமுக முதலில் பாமகவுக்கு இணையாக 7 தொகுதிகளைக் கோரியது. பின்னர் ஆறு என இறங்கி வந்தனர். கடைசியாக 5 தொகுதிகளில் வந்து நிற்கின்றனர்.
ஆனால் ஜெயலலிதா 4 தொகுதிகளுக்கு மேல் தருவதற்குத் தயக்கம் காட்டுகிறார். அதேசமயம், ஐந்து தொகுதிகள் தருவதாக இருந்தால் நாங்கள் கொடுக்கும் தொகுதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை நான்கு போதும் என நினைத்தால் நீங்கள் கோருவதை தருகிறோம் என்று கடைசியாக அதிமுக, மதிமுகவிடம் தெரிவித்துள்ளது.
ஆனால் மதிமுக தலைவர்கள் இப்படி நினைக்கிறார்கள். பாமக திமுக கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் தற்போது அக்கட்சிக்கு 7 சீட்டும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தந்துள்ளனர்.
அதேபோல, கடந்த முறை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டனர். இப்போது அவர்களுக்கு தலா 3 தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயாராக உள்ளது.
அப்படி இருக்கையில், கடந்த முறை 4 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவுக்கு கூடுதலாக ஒரு இடம் ஒதுக்குவதுதானே நியாயம். இதை நாங்கள் கேட்பதில் என்ன தவறு என்கிறார்கள் மதிமுகவினர்.
ஆனால் அதிமுக கூறும் கணக்கு வேறு மாதிரியாக இருக்கிறது. மதிமுக கடந்த முறை நான்கு தொகுதிகளில் போட்டியிட்டாலும் கூட தற்போது அவர்களிடம் இருப்பது 2 பேர்தானே. அந்த இரண்டு பேர் தவிர கூடுதலாக இரண்டு சீட் தருகிறோம். இது போதாதா என்று விட்டலாச்சாரியா கணக்கை கூறுகிறதாம் அதிமுக.
சரி போனால் போகிறது, நான்கு தொகுதிகளை ஏற்றுக் கொள்ளலாம் என்று பார்த்தால் விரும்பிய தொகுதிளையும் தர மறுப்பதால் அதிமுக மீது மதிமுக பெரும் மனஸ்தாபத்தில் உள்ளதாம்.
இது மதிமுகவின் நிலை. சிபிஎம் நிலை வேறு மாதிரியாக இருக்கிறது.
சிபிஎம் கேட்கும் 3 என்ற எண்ணிக்கைக்கு அதிமுக மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டு விட்டது. இவர்களைப் பொறுத்தவரை தொகுதிகள் எவை என்பதில்தான் குழப்பமாக உள்ளது.
திருப்பூர் கண்டிப்பாக வேண்டும் என பிடிவாதமாக நிற்கிறதாம் சிபிஎம். ஆனால் அதை தர முடியாது. நாங்களே போட்டியிடப் போகிறோம் என்கிறார் ஜெயலலிதா.
இந்த ஒரு தொகுதியால்தான் சிபிஎம் - அதிமுக தொகுதிப் பங்கீடு முடியாமல் நீடிக்கிறதாம்.
இப்படி இரு கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடித்துக் கொண்டிருக்கிறது. மறுபறும் திமுக கூட்டணி சத்தம் போடாமல் தொகுதிப் பங்கீட்டை முடித்து, வேட்பாளர்களையும் அறிவிக்க ஆரம்பித்து விட்டது.
இதனால் இன்றைக்குள் இந்தப் பஞ்சாயத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா விரும்புகிறாராம். எனவே இன்று அதிமுக சார்பில் மதிமுக மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் இறுதி கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்க்க முனைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.