வேலூர் 'கோட்டை'யை பிடிப்பாரா காதர் மொய்தீன்?
கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீகுக்கு வேலூரை ஒதுக்கியது திமுக. மாநிலத் தலைவர் காதர் மொய்தீன் வேலூரில் போட்டியிட்டார். உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றார்.
69 வயதாகும் காதர் மொய்தீனே மீண்டும் வேலூரில் போட்டியிடுகிறார். இம்முறை முஸ்லீம் லீக்கின் ஏணி சின்னத்தில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார்.
திருச்சியைச் சேர்ந்தவர் காதர் மொய்தீன். மனைவி பெயர் லதீபா பேகம், 3 மகன்கள்.
காதர் மொய்தீனின் குடும்பம் பாரம்பரியாக தோல் தொழிலில் ஈடுபட்டிருந்தது. ஆனால் அதில் காதர் மொய்தீனுக்கு சற்றும் விருப்பம் இல்லை.
படிப்பில் அதிக ஆர்வம் காட்டினார். நன்றாகப் படிக்கும் திறமை பெற்றிருந்த காதர் மொய்தீன், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வரலாற்று பட்டத்தைப் பெற்றார். பின்னர் அரபு மற்றும் உருது மொழிகளில் பட்டயங்களையும் பெற்றார்.
மாணவராக இருந்தபோது மறைந்த காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீகில் இணைந்தார். மாணவர் அணியில் செயல்பட்டார். முஸ்லீ்ம் மாணவர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
ஆரம்பத்தில் பத்திரிக்கையாளராக செயல்பட்ட காதர் மொய்தீன், பின்னர் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
ஆனால் முழு நேர அரசியல்வாதியாக விரும்பிய அவர் பேராசிரியர் பணியைத் துறந்து தீவிர அரசியலுக்கு வந்தார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் பல சட்டமன்றத் தேர்தல்களில் திருச்சியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். திருச்சி எம்.பி.தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.
இருப்பினும் சொந்த ஊரில் தோல்வியைத் தழுவினாலும், கோட்டை நகரமான வேலூர் காதர் மொய்தீனுக்கு கை கொடுத்தது. கடந்த தேர்தலில் திமுகவின் துணையோடு எம்.பி ஆனார் மொய்தீன்.
மீண்டும் வேலூரில் நிற்கிறார் காதர் மொய்தீன். இம்முறை திமுக கூட்டணி வலுவாக இல்லை என்ற போதிலும் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் உள்ளது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.