புலிகளுக்கு உதவி-அரசியல் புள்ளியிடம் விசாரணை
ராமநாதபுரம் : சென்னையில் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர் புலிகள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் சென்னை நகருக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி, திருவான்மியூரில் பதுங்கி இருந்த கடல் புலிகள் பிரிவை சேர்ந்த இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமானப் வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையை அடு்த்து ராமநாதபுரத்தை சேர்ந்த பாபு மற்றும் கடலூரை சேர்ந்த குகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கு தமிகத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் பிரமுகருக்கு ஒருவர் உதவியுள்ளதாகவுகம், அவர் தான் விடுதலை புலிகளுக்கு தஞ்சம் கொடுத்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அந்த அரசியல் பிரமுகரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.