புதுச்சேரி ஆளுனர் டெல்லியில் மரணம்
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜார் சமீபத்தில் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தான் சென்றார். அங்கு அவருக்கு கடந்த 11 ம் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் டெல்லி அப்பலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 25 நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கோவிந்த் சிங் குர்ஜாருக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. டாக்டர்கள் அவரை காப்பாற்ற கடுமையாக போராடினர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்று கவர்னர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரியில் இன்று விடுமுறை...
இது குறித்து புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் கூறுகையி்ல,
ஆளுனரின் உடல் விமானம் மூலம் சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. நாளை மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.
புதுச்சேரியில் இருக்கும் முக்கிய தலைவர்களுடன், இறுதி சடங்கில் நானும் பங்கேற்க இருக்கிறேன். இதற்காக நாளை ராஜஸ்தான் செல்கிறேன். ஆளுனர் மறைவை அடுத்து புதுச்சேரி அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என்றார் வைத்தியலிங்கம்.
கோவிந்த் சிங்க குர்ஜார் 1932ம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தவர். வக்கீலாக வாழ்க்கையை துவங்கிய இவர் மூன்று முறை ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர். புதுச்சேரி ஆளுனராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23ந்தேதி கோவிந்த்சிங் குர்ஜார் பதவி ஏற்றார்.