சென்னையில் விசி பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை
சென்னை: சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை யானை கவுனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ் ( 26). விடுதலை சிறுத்தை கட்சியில் இருக்கிறார். அக்கட்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்த சதீஷின் அண்ணன் தலில் பாலு என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து இவரை கொன்ற கும்பலை ஒருவர் என கருது பாபு என்பவரை கொலை செய்ததாக சதீஷ் மீது வழக்கு உள்ளது. இது தவிர்த்து அவர் மீது சில அடிதடி வழக்குகளும் உள்ளன.
இந்நிலையில் சதீஷ் தனது நண்பர்களுடன் சூளை பகுதியில் இருக்கும் கண்ணப்பர் திடலில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் சதீஷை சுற்றி வளைத்தது. அவர்களது கையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பதை கண்ட அவரது நண்பர்கள் பயந்து தப்பி ஓடினர்.
சதீஷ் அங்கிருந்த சுவர் ஒன்றில் ஏறி குதித்து தப்பி ஓட முயன்றார். அவரை விரட்டி சென்ற அந்த கும்பல் அவரை பிடித்தது. கழுத்து, மார்பு, தலை, தோள் என 15 இடங்களில் சராமரியாக கத்தியால் குத்தி அவரை கொலை செய்தது.
இதையடுத்து போலீஸ் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையி்ல், பாபுவின் கொலைக்கு பழி வாங்கும் வகையில் சதீஷ் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.