சத்யம் ஏலம்: பின் வாங்கியது ஐபிஎம்!
சத்யம் நிறுவனப் பங்குகளை வாங்கினால், சத்யம் மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்குகளையும் சேர்த்தே சந்திக்க வேண்டிவரும் என்ற சூழல் உள்ளதால், வேண்டாம் இந்த தொல்லை என்ற முடிவுக்கு அந்நிறுவனம் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
சத்யம் நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் மட்டும் பலவேறு பிரிவுகளில் 13 வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணையில் உள்ளன. சத்யம் அமெரிக்க கிளைகளில் பயன்படுத்தப்பட்ட மொபைல் போனுக்குக் கூட பணம் கட்டவில்லையாம். இதற்காக 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது அந்த செல்போன் நிறுவனம். அமெரிக்க பங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பும் வழக்கு தொடர்ந்துள்ளது.
சத்யம் பங்குகளை வாங்கிய பிறகு இந்த மாதிரி வழக்குகளில் சிக்கி இருக்கிற நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லையாம் ஐபிஎம் நிறுவனம். எனவே சத்யம் பங்கு ஏலத்தில் கலந்து கொள்வதில்லை என அறிவித்துள்ளது.
இப்போதைய நிலவரப்படி சத்யம் பங்குகளை வாங்க டெக் மஹிந்திரா, எல் அண்டு டி, காக்னிஸன்ட் டெக்னாலஜி மற்றும் வில்பர் எல் ரோஸ் போன்றவைதான் களத்தில் உள்ளன.
சில தினங்களுக்கு முன்புதான் ஐகேட்ஸ் மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்கள் இந்தப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டன.