ஒபாமா ஆலோசகருக்கு ரிலையன்ஸ்-டிசிஎஸ் தந்த $2.24 லட்சம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பொருளாதார வாரிய ஆலோசகரான லாரன்ஸ் சம்மர்ஸ், இந்திய நிறுவனங்கள் ரிலையன்ஸ் மற்றும் டிசிஎஸ்ஸிடமிருந்து 2.24 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சம்மர்ஸ் மற்றும் ஒபாமாவின் இதர ஆலோசகர்கள் எப்படியெல்லாம் பணம் பெற்றுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது சமீபத்தில் வெள்ளை மாளிகை வெளியிடப்பட்டுள்ள ஒரு 'வெளிப்படுத்தும் ஆவணம்' (வெள்ளை அறிக்கை என்றும் சொல்லலாம்.)
இந்த அறிக்கையின்படி, இந்திய நிறுவனமான ரிலையன்ஸிடமிருந்து 187000 டாலர்களை ஆலோசனை வாரிய கட்டணமாகப் பெற்றுள்ளார் சம்மர்ஸ். இந்தத் தொகையைக் கொடுத்தது உண்மைதான் என்றும், சம்மர்ஸ் தங்கள் நிறுவனத்தின் சர்வதேச ஆலோசனைக் குழு உறுப்பினர் என்றும் சர்வதேச அளவில் புதுமைகளைப் புகுத்துவதில் ஆலோசனை கூறும் முக்கிய நபராக இருந்தார் என்றும் ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனரி 20ம் தேதி ஒபாமா நிர்வாகத்தில் சேர்வதற்கு முன்பே இந்த கமிட்டிகளிலிருந்து முறையாக விலகிவிட்டார் என்று கூறியுள்ளார் அந்த செய்தி தொடர்பாளர்.
அதோபோல டாடாவின் டிசிஎஸ் நிறுவனத்திடமிருந்தும் 67500 டாலர்களை கடந்த செப்டம்பர் 21-ம் தேதி 'பேசுவதற்கான கட்டணமாக' பெற்றுள்ளார் சம்மர்ஸ்.
தங்கள் 'பிராண்டை' சர்வதேச அளவில் பிரபலப்படுத்த ஏற்பாடு செய்திருந்த திட்டத்தின் கீழ் சம்மர்ஸுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டதாகவும், ஹார்வர்டு பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியரான சம்மர்ஸ் இதற்குத் தகுதியானவர் என்றும் டிசிஎஸ் அறிவித்துள்ளது.
இவை தவிர, சிட்டி குரூப், ஜேபி மார்கன், கோல்ட்மேன் சாஷ், திவாலான லேஹ்மன் பிரதர்ஸ் ஆகியவையும் பெருமளவு பணம் கொடுத்துள்ளன. இப்படி அவர் பெற்றுள்ள மொத்தத் தொகை 2.7 மில்லியன் டாலர்கள்.
இதில் முக்கியமான விஷயம்: இவர் எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றுள்ளாரோ அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க அரசிடமிருந்து சமீபத்தில் பெய்ல் அவுட் என்ற பெயரில் பல மில்லியன் அல்லது பில்லியன் டாலர்களை சலுகைகளாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.