ரயில்கள் 'புல்'.. 'வெயிட்டிங் லிஸ்ட்' கூட இல்லை!
சென்னை: கோடை விடுமுறை காரணமாக தமிழகத்தில் ரயில்கள் நிரம்பி வழிகின்றன. வெயிட்டிங் லிஸ்ட் பட்டியலே தீர்ந்துவிடும் நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களின் டிக்கெட்டுகள் அனைத்தும் 2 மாதங்களுக்கு முன்பே விற்று தீர்ந்துவிட்டன. இதில் முதல் வகுப்பு, ஏசி பெட்டிகளின் டிக்கெட்டுகளும் அடக்கம்.
சிறப்பு ரயில்களும் 'புல்'...
அதே போல சிறப்பு ரயில்களின் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
மே மாதம் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் அனைத்து ரயில்களின் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன.
நெல்லை மற்றும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2ம் வகுப்பு வெயிட்டிங் லிஸ்ட் 200யை தொட்டுவிட்டது.
இதனால் மேலும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில்:
இந் நிலையில் வரும் 9ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்னொரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் பகல் 2.40 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் 10ம் தேதி இரவு 9.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் பகல் 1 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.