கர்நாடகம்-தமிழர்களை வைத்து அரசியல் ஆரம்பம்
பெங்களூர்: கர்நாடகத்தில் தமிழர்கள் 20 சட்டசபை மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறும் செல்வாக்கு உள்ளதாக மதசார்பற்ற ஜனதா தளம் கூறியுள்ளது.
தேர்தல் நேரம் நெருங்கி வருவதை அடுத்து கர்நாடக கட்சிகள் தமிழர்களுக்கு நல திட்ட வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன. கடந்த சட்டசபை தேர்தலில் தமிழர்களின் ஓட்டு காங்கிரஸ் பக்கம் விழுந்ததை அடுத்து, நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களின் ஓட்டு வங்கியை தங்கள்வசம் திருப்ப பாஜக முயன்று வருகிறது.
இதையடுத்து சமீபத்தில் ஷிமோகாவில் நடந்த மாவட்ட தமிழர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டார். அப்போது நாமெல்லாம் சகோதரர்கள். தமிழர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என உறுதிமொழிகளை அள்ளி வீசினார். அந்த மாநாட்டையே பாஜக தான் நடத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால் இதை தமிழர் சங்கம் மறுத்துள்ளது.
இவரை தொடர்ந்து தற்போது காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழர் பிரச்சினைகளை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழர்களை வைத்து அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடும் மாதசார்பற்ற ஜனதா தள வேட்பாளரான ஜமீர் அகமது மர்பி டவுன் அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் பேசுகையில்,
மத்திய பெங்களூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாங்கிலியானாவுக்கு மக்கள் ஆதரவு கொஞ்சமும் இல்லை. எனக்கும், பாஜக வேட்பாளர் பி.சி. மோகனுக்கும் தான் நேரடி போட்டி.
நான் கடந்த சட்டசபை தேர்தலில் வென்றுள்ளன். ஆனால், பாஜக வேட்பாளர் கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தவர். இதனால் எனது வெற்றி உறுதியாகியுள்ளது. எனக்கு முஸ்லிம் ஓட்டு மட்டும் தான் கிடைக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். அது தவறானது. மற்ற சமுதாய மக்களும் என் மீது அன்பு வைத்துள்ளார்கள்.
தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை...
பெங்களூர் மத்திய தொகுதியில் 5 லட்சத்துக்கும் அதிகமாக தமிழர்கள் உள்ளனர். இதனால் உண்மையிலேயே அரசியல் கட்சியினர் தமிழர்களுக்கு தான் இங்கே டிக்கெட் கொடுக்க வேண்டும். ஆனால் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லாததால் அவர்கள் அரசியல் உரிமையை இழந்துள்ளார்கள்.
இம்முறை தமிழர்கள் ஒன்றிணைந்து எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தேவெ கெளடா-குமாரசாமியிடம் பேசி மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் இந்தத் தொகுதியில் தமிழர்களுக்கு தேர்தல் டிக்கெட் வாங்கி கொடுப்பேன். இது உறுதி.
கர்நாடகத்தில் தமிழர்கள் 20 எம்எல்ஏ தொகுதிகளில் வெற்றி பெறலாம். 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். இதை முதலில் தமிழர்கள் உணர வேண்டும்.
பெங்களூர் பெருநகர மாநகராட்சி தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் எங்கள் கட்சியின் சார்பில் தமிழர்களுக்கே தேர்தல் டிக்கெட் கொடுக்க முயற்சி எடுப்பேன் என்றார் ஜமீர் அகமது.
தங்க சுரங்கத்தை மூடியது பாஜக தான்...
இந் நிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முனியப்பா அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசுகையி்ல்,
பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் பாதை...
புதுச்சேரியில் இருந்து பெங்களூர் வரை உள்ள 250 கி.மீ. தூரத்துக்கு ரூ. 750 கோடி செலவில் புதிய ரோடு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தங்கவயல் வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் வழி அமைக்கவும் முடிவு செய்து அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது தான் இங்கே தங்கச் சுரங்கம் மூடப்பட்டு பல ஆயிரம் தமி்ழ்த தொழிலாளர்கள் பணியிழந்தார்கள். இதனால் லட்சக்கணக்கான தமிழர்கள் குடும்பங்கள் பரிதவித்து நிற்கின்றன. (மத்தியி்ல் இவரது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின் ஏன் திறக்கவில்லை என்று தெரியவில்லை)
தங்கவயல் பிஇஎம்எல் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் தொடர்பாக நிர்வாக இயக்குனரிடம் பேசியுள்ளேன். மீண்டும் என்னை வெற்றி பெற செய்தால், தங்கவயல் நிச்சயமாக பழைய பொலிவு மீண்டும் வரும். தங்கவயல் ஒளிரும் என்றார் முனியப்பா.