பாளை சிறையில் 450 கைதிகள் உண்ணாவிரதம்
நெல்லை: ஜெயிலில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்க கோரி பாளையங்கோட்டை மத்திய சிறையில் 450 கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் 650 கைதிகள் உள்ளனர். இவர்களில் விசாரணை கைதிகள் உள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிறையில், கூலிப்படையாக செயல்பட்டு கைதானவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த கைதிகள் தனியாக சமைத்து சாப்பிடுகின்றனர். செல்போன்கள் மூலம் குடும்பத்தினர், உறவினர்களிடமும் பேசி வருகின்றனர்.
இதுபோன்ற சலுகைகள் தங்களுக்கும் வேண்டும் என்ற கோரிக்கை மற்ற கைதிகளிடமும் எழுந்துள்ளது. இந்த கோரிக்கைகளை சிறை அதிகாரிகள் நிராகிரித்தனர். ஆனால் சில கைதிகளுக்கு மட்டும் தொடர்ந்து சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக கைதிகள் புகார் கூறி வருகின்றனர்.
தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 80க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் சிலர் பிணையில் சென்றுவிட்டனர். சிலரை வழக்குகள் இருப்பதாக கூறி அவர்களை மீண்டும் சிறையில் போலீசார் அடைத்துள்ளனர் .
கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் பிணையில் செல்லும் கைதிகளை மீண்டும் கைது செய்யக்கூடாது என்றும் 100 கைதிகள் திடீரென உண்ணாவிரதம் இருந்தனர். இவர்களுக்கு ஆதரவாக சிறையில் உள்ள 350 கைதிகள் காலை உணவை சாப்பிடவில்லை.
சிறை அதிகாரிகள் கைதிகளை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தனர். இந்த உண்ணாவிரதம் 2 மணி நேரம் மட்டுமே நடந்தது என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications