பசி.. 'எம்சிஏ'விடம் நகைபறித்த 'எம்பிஏ' கைது!
சென்னை: சென்னையில் எம்சிஏ படிக்கும் கல்லூரி மாணவி மீது மிளகாய் பொடி தூவி அவரது நகையை திருடி சென்ற எம்பிஏ படித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் வேலை இல்லாத காரணத்தாலும், பசி கொடுமையின் காரணமாகவும் திருடியதாக தெரிவித்துள்ளார்.
கரூரை சேர்ந்த பூமா (23) என்ற எம்சிஏ மாணவி கடைசி செமஸ்டர் புராஜக்ட் செய்வதற்காக சென்னை வந்து சைதாபேட்டையில் தங்கியுள்ளார். ஊருக்குச் சென்றுவிட்டு நேற்று காலை மீண்டும் சென்னை வந்தார்.
கிண்டியில் இறங்கிய அவர் அதிகாலை 5.15 மணி அளவில் சைதாப்பேட்டை தரைப்பாலம் வழியாக தான் தங்கியிருந்த அறைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த வாலிபர் ஒருவர் பூமாவை தாக்கி அவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவினார். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு ஓடினார்.
ஆனால், உடனே சுதாரித்து கொண்ட பூமா கத்திக் கொண்டே அவரைத் துரத்தினர். அங்கிருந்த பொது மக்கள் சிலரும் அந்த வாலிபரை துரத்தி பிடித்து உதைத்து சைதாப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரிடம் அந்த வாலிபர் கூறுகையில்,
என் பெயர் இளையராஜா (24), திருச்சி அருகே கள்ளக்குடி தான் எனது சொந்த ஊர். எனது தந்தை துரைராஜ் இறந்துவிட்டார். 2 அண்ணன்களும், ஒரு அக்காவும் இருக்கின்றனர். எம்பிஏ முடித்துள்ளேன். வேலை கிடைக்காமல் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டதால் நகையை பறித்தேன் என்று கூறியுள்ளார்.