செளதி தூதரகம்-ஏர் இந்தியாவுக்கு அல்-கொய்தா குறி
மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் கஸாப் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் மும்பையில் மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை நிறைவேற்ற தீவிரவாதிகள் தயாராகி வருவதாக உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் மும்பையில் கபே பரேடே பகுதியில் மேக் டவரின் நான்காவது மாடியில் இருக்கும் சவுதி தூதரகத்தை தகர்க்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
மேலும், தீவிரவாதிகள் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கும் குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதை செய்ய போவது அல் கொய்தா என உளவு துறை கூறியிருப்பதால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் இந்த தாக்குதல்களை நடத்தினால் இந்தியாவுக்கு அதிக நெருக்கடி ஏற்படுத்த முடியும் என அல் கொய்தா கருதுகிறது.
இது குறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பாதுகாப்பை அதிகரிக்கும்படி எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி கூறப்பட்டுள்ளோம். சவுதி அரேபியாவின் துணை தூதரகத்துக்கு மட்டுமல்ல சவுதியிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு கொடுத்து வருகிறோம்.
அதேசமயத்தில் சவுதியில் இருந்து வரும் விமானங்களில் ரகசிய கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறோம். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளும் மிரட்டல் விடுத்து வருவதாக உளவுத் துறை கூறி வருகிறது. என்றாலும் இவர்கள் அனைவரையும் விட அல் கொய்தா தீவிரவாதிகள் மோசமானவர்கள்.
அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் போல் விமானத்தை கடத்தி தாக்குதல் நடத்தலாம் என்பதால் மும்பை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.
ஏர் இந்தியாவுக்கு மிரட்டல் இமெயில்...
இந்நிலையில் நேற்று மும்பை ஏர் இந்தியா விமான அலுவலகத்துக்கு ஒரு இமெயில் வந்தது. அதில் அந்த அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த இ-மெயில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து வந்து இருப்பதை கண்டுபிடித்தனர். கடந்த இரண்டு வாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது இது மூன்றாவது முறை.