பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன்-பவார்:
டெல்லி: பிரதமர் பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ள பவார் சமீபகாலமாக மூன்றாவது அணியுடனும் கைகோர்த்துக் கொண்டு ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று டபுள் ஆக்ட் செய்து வருகிறார்.
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இவரது தேசியவாத காங்கிரஸ் தொகுதி உடன்பாடு செய்திருந்தாலும் மற்ற மாநிலகளில் மோதுகின்றன.
இந் நிலையில் 3வது அணியுடன் திடீர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ள பவார் பிரதமர் பதவியை பிடி்கக திட்டமிட்டு வருகிறார்.
இது குறித்துக் கேட்டபோது, மறைக்காமல் ஒப்புக் கொண்டார். அவர் கூறுகையில்,
மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் பிரதமர் வேட்பாளர், கூட்டணிக்கு அல்ல.
பள்ளி, கல்லூரிகளில் எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண், செய்முறைத் (பிராக்டிகல்ஸ்) தேர்வுக்கு 40 மார்க் ஒதுக்குவது மாதிரி, இந்தத் தேர்தலை பொறுத்தவரை 3வது அணி செய்முறை தேர்வில் 40 மதிப்பெண் பெறும் வாய்ப்புண்டு.
என்னைப் போன்ற மாணவர்கள் பாஸ் ஆக செய்முறை தேர்வின் மதிப்பெண்ணைத் தான் நம்பியிருப்போம். அது மாதிரி தான் இப்போதைய அரசியல். தேர்தலுக்குப் பின் இடதுசாரிகள் இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்பது என் கணிப்பு.
ஆட்சி அமைக்க அவர்களின் ஆதரவு காங்கிரசுக்கு தேவைபடும் நிலை ஏற்படும். கடந்த 4 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகள் ஆதரவு இன்றி ஆட்சி நடத்தியிருக்க முடியாது.
தேர்தலுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு முன்னணியில் மேலும் புது கட்சிகள் சேரலாம். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என்றார்.
தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் பிரமதர் பதவிக்கு மன்மோகன் சிங்கை நிறுத்தக் கூடாது என்று இடதுசாரிகள் நிபந்தனை விதிப்பார்களா என்று கேட்டதற்கு,
இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது, கடந்த முறை இது போன்ற நிலை ஏற்படவில்லை என்றார். அப்படி ஒரு நிலை வந்தால் பவார் போட்டியில் குதிக்கலாம் என்று தெரிகிறது.