கரூரில் 3வது முறையாக போட்டியிடும் தம்பித்துரை
எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதிகளில் ஒருவர் தம்பித்துரை. எம்.ஜி.ஆர். இருந்தபோது மக்களவை துணை சபாநாயகராக பணியாற்றினார் தம்பித்துரை.
அப்போது முதலே இவர் தீவிர ஜெயலலிதா விசுவாசி. இது, ஜெயலலிதா அரசியலில் ஏற்றம் பெற்றவுடன் தம்பித்துரையின் உயர்வுக்கும் வழி வகுத்தது.
53 வயதாகும் தம்பித்துரை, எம்.ஏ., எம்.ஃபில், பி.எச்.டி. முடித்தவர். கொங்கு வேளாள கவுண்டர் பிரிவைச் சேர்ந்தவர். தற்போது அதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிறார். எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார்.
1984ம் ஆண்டு தர்மபுரி தொகுதியிலிருந்து எம்.பி. ஆனார். 1989, 1998 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் கரூரில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
தற்போது பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக உள்ளார். கரூர் தொகுதியின் வலிமையான மனிதராக கருதப்படும் திமுகவின் கே.சி.பழனிச்சாமியை இம்முறை எதிர்கொள்கிறார் தம்பித்துரை.
வெல்லப் போவது பழனிச்சாமியா, தம்பித்துரையா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.