விருதுநகர்-குமரி: தொகுதிகளை மாற்ற திமுக-காங் திட்டம்?
சென்னை: விருதுநகர் தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுவதால் அந்தத் தொகுதியை திமுக எடுத்துக் கொண்டு அதற்குப் பதில் கன்னியாகுமரி அல்லது தென் சென்னையை காஙகிரசுக்கு விட்டுத் தரும் என்று தெரிகிறது.
மேலும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கன்னியாகுமரி தங்களுக்கு ஒதுக்கப்படாததைக் கண்டித்து அங்கு திமுகவுக்கு எதிராக உள்ளூர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் வேட்பாளர்களை முடிவு செய்ய கடந்த 3 நாட்களாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். மத்திய அமைச்சர் ஆண்டனி, தமிழக தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான குழு பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்து சோனியாவிடம் பட்டியலைத் தந்துவிட்டது.
இதில் அமைச்சர்கள் ப.சிதம்பரம், இளங்கோவன் ஆகியோருக்கு சிவகங்கையும் ஈரோடும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேனி தொகுதியில் ஜே.எம்.ஆரூணுக்கு ஒதுக்கப்படுகிறது.
இதற்கிடையே விருதுநகரில் வைகோ போட்டியிடுவதால் அந்தத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் யோசிப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து வைகோவை தானே எதிர்கொள்ள திட்டமிட்டுள்ள திமுக அந்தத் தொகுதியை எடுத்துக் கொண்டு எற்கனவே சிக்கலுக்குள்ளான கன்னியாகுமரியை காங்கிரசுக்கு ஒதுக்கலாம் என்று தெரிகிறது.
அதே போல சேலத்தில் முன்னாள் அமைச்சரும் அந்தப் பகுதியில் நற்பெருடன் விளங்குபவருமான செம்மலையை அதிமுக நிறுத்தியுள்ளதால் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சேலம் தொகுதியிலிருந்து இடம் மாற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்காக அவர் தனக்கு தென் சென்னையைக் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு திமுக ஒப்புக் கொண்டால் தென் சென்னைக்குப் பதில் சேலத்தில் திமுக களமிறங்க வேண்டி வரலாம். ஆனால், இதற்கு திமுக ஒப்புக் கொள்ளாது என்கிறார்கள்.
இதற்கிடையே கோஷ்டிகளின் கடும் போட்டி காரணமாக காஞ்சிபுரம், திருநெல்வேலி தொகுதிக்கு வேட்பாளர்களை முடிவு செய்வதில் டெல்லி காங்கிரஸ் தலைமையே குழம்பிப் போயுள்ளதாகவும் தகவல் வருகிறது. இதனால் வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சி பார்ட், பார்ட்டாக வெளியிடவுள்ளதாம்.