கருணாநிதி தமிழர்களின் முதுகில் குத்துகிறார்-நெடுமாறன்
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி பொது கூட்டத்தில் பேசுகையில், 'போரில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால் அவரைக் கெளரவமாக நடத்த வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் அவரது பேச்சுக்கு தமிழர் விடுதலை இயக்க தலைவர் நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிடம் ஆயுதங்களை வாங்கி, அதை வைத்து இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று வருகிறது.
இவர்களை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தை பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்தி வருகின்றனர். இலங்கை தமிழர்களை காப்பாற்றப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூறவில்லை.
புலிகள் வெல்வார்கள்..
தமிழர்களை நச்சு குண்டு வீசி கொல்லும் இலங்கை ராணுவத்தை கண்டித்து கூற முன்வராத முதல்வர் கருணாநிதி, ஈழத் தமிழர்களின் முதுகில் குத்துவதை போல் பேசியிருப்பதை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
முதல்வரின் விஷமத்தனமான ஆசை ஒருபோதும் நிறைவேறாது. பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகளும் வெற்றி பெறுவார்கள். இது உறுதி. முதல்வர் தன் வாழ்நாளிலே இதை நிச்சயம் காண்பார் என கூறியுள்ளார் நெடுமாறன்.
ஜெ சொன்னால் நெடுமாறனுக்கு இனிக்கும்..ஆற்காடு:
நெடுமாறனின் கருத்துக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி மூலம் திமுக உடனடியாக பதிலளித்துள்ளது. இது தொடர்பாக வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்காக நடத்திய மாபெரும் பேரணியில் உரையாற்றியது கேட்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அந்த பேச்சுக்கு உள்நோக்கம் கற்பித்து விஷத்தை கக்கியுள்ளார். நெடுமாறன் போன்றவர்களுக்கு ஜெயலலிதா எது சொன்னாலும் அது இனிக்கும், தமிழுக்காகவோ, தமிழர்களுக்காகவோ உண்மையாக கருணாநிதி பாடுபட்டால் எந்தக் காலத்திலும் பிடிக்காது.
ஜெயலலிதா ஆட்சி நடத்திய போது இந்த நெடுமாறனைப் பிடித்து பொடா சட்டத்தின் கீழ் சிறையிலே அடைத்திருந்த போது இவருக்கு பரிதாபப்படவோ, குரல் கொடுக்கவோ நாதியில்லாமல் இருந்த நிலையில் கருணாநிதி தான் இவரை சிறையிலிருந்து வெளியே கொண்டுவர பாடுபட்டார்.
இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றோ, விடுதலைப் புலிகளைப் பற்றியோ நெடுமாறனுக்கோ, அவருடைய கும்பலுக்கோ எந்த விதமான அக்கறையும் கிடையாது. அவர்களைப் பாராட்டுவதைப் போல அறிக்கை கொடுத்தால் தான் பிழைப்பு நடக்கும், வருகின்ற வருமானமும் நிற்காமல் வரும்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பிரபாகரனை கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்து தண்டனை கொடுக்க வேண்டுமென்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த போது வாய் திறக்காதவர்கள் எல்லாம் இப்போது ஒரு சில தேர்தல் இடங்களுக்காக அவரிடம் சென்றுள்ளார்கள்.
போரின் முடிவு பிரபாகரன் தலைமையிலே உள்ள அந்தப் புலிகளுக்கு தோல்வியாக இருந்தால் என்ன நடக்கும்?, ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியது போன்ற நிலை ஏற்படும்.
அப்படிப்பட்ட காலக் கட்டத்தில் என்ன செய்ய வேண்டும்?, பிரபாகரனை மதிக்க வேண்டுமென்று - விடுதலைப் புலிகள் பற்றி திமுகவுக்கு எத்தனையோ கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் முதல்வர் பெருந்தன்மையோடு ஒரு தமிழன் என்ற உணர்வோடு பேசியிருக்கிறார். அந்தப் பேச்சை புரிந்து கொள்ளாதவர்கள், அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் எவ்வளவு விஷமத்தனமாக அர்த்தம் கற்பிக்க முடியுமோ அந்த அளவிற்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
போரஸ் மன்னனைப் போல் மரியாதை கொடுக்க வேண்டுமென்றால் - இன்னொருவர் ஆகா அப்படியென்றால் ராஜபக்சே அலெக்சாண்டரா? என்று அர்த்தம் கற்பிக்க முயலுகிறார்.
போர் என்றால் எந்த நாட்டிலும் அப்பாவிகள் கொல்லப்படத் தான் செய்வார்கள் என்று ராஜபக்சேக்கு ஆதரவாகப் பேசியவர் ஜெயலலிதா. அப்போது வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு, தமிழர் ஒருவர், அவர் எப்படிப்பட்டவராக இருந்த போதிலும், அதைப்பற்றியெல்லாம் மனதிலே போட்டுக் கொள்ளாமல் அவர் சுயமரியாதை இழந்துவிடக் கூடாது, அவருடைய மதிப்பு போய்விடக் கூடாது என்பதற்காக கருணாநிதி பேசிய பேச்சுக்கு விஷ விதை ஊன்ற முற்படுபவர்களை தமிழகம் நன்றாகவே புரிந்து தான் வைத்துள்ளது என்று கூறியுள்ளார