இட்லி கடை நடத்தும் 'எம்பிஏ' தேர்தலில் போட்டி
ஆலந்தூர்: சென்னையில் இட்லி கடை நடத்தி வரும் எம்பிஏ பட்டதாரி ஒருவர் தென் சென்னை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என ஊர் சுற்றும் சோம்பேறிகளுக்கு மத்தியில் ஒயிட் காலர் வேலை தான் வேண்டும் என எதிர்பார்க்காமல் கடுமையாக உழைக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த சரத்பாபு.
எம்பிஏ முடித்துள்ள இவர் சுயமாக இட்லி கடை நடத்தி வருகிறார். தான் படித்த எம்பிஏவை இட்லி கடையில் பயன்படுத்த தற்போது கடையை விறுவிறுவென பெரிதாகி 250க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.
இந்நிலையில் சரத்பாபு தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட போவதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையி்ல்,
நாட்டில் லஞ்சம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவேன். இளைஞர்களை நல்வழிப்படுத்த தேவையான முயற்சிகளை செய்வேன். வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் உழைப்பேன்.
கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்து பணியாற்றுவேன். இது போன்ற காரியங்களை செய்வதற்காக தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். பொதுமக்களிடம் நேரிடையாக சென்று அவர்களது குறைகளை கேட்டு புதிய சமுதாயம் உருவாக்க ஓட்டு கேட்பேன் என்றார்.