For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 தொகுதிகளின் வெற்றியை நிர்ணயிக்கும் நாடார்கள்

By Staff
Google Oneindia Tamil News

-கே.எம்.கே.இசக்கி ராஜன்

நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 தொகுதிகளின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக நாடார் சமுதாயத்தினர் விளங்குகின்றனர்.

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 25 சட்டமன்ற தொகுதிகளிலும் நெல்லை, தற்போது தொகுதி மறு சீரமைப்புபடி மாற்றப்பட்டுள்ள (நாகர்கோவில்) கன்னியாகுமரி, (திருச்செந்துர்) தூத்துக்குடி ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ், அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நாடார் சமூக வாக்குகளை மையம் வைத்தே வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

திருச்செந்தூர் தொகுதியில் 1977 முதல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் நாடார் சமூகத்தை சேர்ந்த தனுஷ்கோடி ஆதித்தன் நடிகர் ராமராஜன், ஜெயசீலன், ராதிகா செல்வி ஆகியோரே வெற்றி பெற்றனர்.

இதில் ராதிகா செல்வி, தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் மத்திய அமைச்சர் பதவிகளும் பெற்றனர்.

தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் இந்தத் தொகுதிகளில் நாடார் சமூக வேட்பாளர்களே அனைத்து கட்சிகள் சார்பிலும் களத்தில் குதிக்க உள்ளனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு அமைச்சர் பதவிகள் நாடார் சமூகத்திற்கு வழங்கப்பட்டன.

தற்போதைய திமுக ஆட்சியில் இதே மாவட்டத்திற்கு 1 மத்திய அமைச்சரும், ஒரு மாநில அமைச்சர் பதவியும் நாடார் சமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது காங்கிரஸ் அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் 5 பேரும் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களே.

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் 1980க்குபிறகு சிவபிரகாசம், கடம்பூர் ஜனார்த்தனன், பிஎச் பாண்டியன், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாவட்டத்திலுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த அதிமுக ஆட்சியின் போது 6 சட்டமன்ற உறுப்பினர்கள் நாடார் சமூகத்தினர்தான். தற்போது திமுக ஆட்சியில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா அமைச்சராக உள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் நாடார் சமுகத்திற்கு எம்எல்ஏக்கள் அதிகம் இருந்தனர். ஆனால் இந்த மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி நாடார் சமூகத்திற்கு வழங்கப்படவில்லை.

குமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் 1951க்கு பிறகு பெருந் தலைவர் காமராஜர், குமரி ஆனந்தன், டென்னிஸ், பெல்லார்மின், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாடாளுமன்ற உறுபபினர்களாக இருந்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் தற்போதுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் நாடார் சமூகத்தினரே. இதில் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக்கியது பாஜக.

தற்போது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதியில் தேமுதிக அறிவித்துள்ள வேட்பாளர்கள் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களே. திமுக போட்டியிடும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, அதிமுக போட்டியிடும் நெல்லை, தூத்துக்குடி, காங் போட்டியிடும் நெல்லை ஆகிய தொகுதிகளில் நாடார் சமூக வேட்பாளர்களே நிறுத்தப்படுவார்கள் என்பது உறுதி.

இப்படி தென் மாவட்டங்களில் நாடார் வாக்கு வங்கிகளை மையப்படுத்தி காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, திமுக, பாஜக போன்ற கட்சிகள் களத்தில் குதித்தாலும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாடார் சமூகம் கள் இறக்க அனுமதி கேட்டு போராட்டம் நடத்திய போது அதனை காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் வெகுவாக எதிர்த்தன.

தடையை மீறி தமிழகமெங்கும் போராட்டங்களில் ஈடுபட்ட பல்லாயிரக்கனக்கான இச்சமூக மக்களை கைது செய்தனர். தேர்தலில் இந்தப் பிரச்சனை பூதாகரமாகும் என்று தெரிகிறது.

ஏற்கனவே நாடார் பேரவை கள் இறக்க அனுமதிக்கும் கட்சிக்கே வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X