2 நாள் போர் நிறுத்தம் அறிவித்தது இலங்கை!
போர் முனையிலும், வட கிழக்கு கடலோரத்தில் 17 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள பாதுகாப்பு வளையத்திலும் சிக்கியுள்ள தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுவதையடுத்து உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் உலக நாடுவதாக நிர்பந்தம் செய்து வரும் நிலையில் இந்த தாற்காலிக போர் நிறுத்தத்தை இலங்கை அறிவித்துள்ளது.
இது குறித்து ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாதுகாப்பு வளையப் பகுதியில் புலிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வெளியேறும் வகையில் அடுத்த 2 நாட்களுக்கு (திங்கள், செவ்வாய்) புலிகள் மீதான தாக்குதலை ராணுவம் நிறுத்தி வைக்கும்.
இந்த கால கட்டத்தில் மக்கள் சுதந்திரமாக வெளியே அனுமதிக்கப்பட வேண்டும்.
செவ்வாய்க்கிழமை தமிழ்-சிங்கள புத்தாண்டு வருவதையொட்டி இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் தற்காப்பு தாக்குதல் தவிர மற்ற தாக்குதல்களை நடத்த வேண்டாம் என ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
முன்னதாக அந் நாட்டு செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷனா யபா கூறுகையி்ல், நாளையும் செவ்வாய்க்கிழமையும் இந்தப் போர் நிறுத்தம் செய்யப்படும். பாதுகாப்பு வளையப் பகுதியில் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துள்ள மக்கள தப்பிச் செல்லும் வகையில் இந்த தாற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுகிறது என்றார்.
பாதுகாப்பு வளையம் என்று கூறிக் கொண்டு இந்தப் பகுதியியிலும் தினந்தோறும் குண்டுகளை வீசி தமிழர்களை ராணுவம் கொன்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள சண்டே அப்சர்வர் நாளிதழில் இன்று வெளியான செய்தியில்,
பாதுகாப்பு வளையத்தில் சிக்கியுள்ள மக்கள் சுதந்திரமாக வெளியேற அனுமதித்தால் 48 மணி நேர போர் நிறுத்தத்தக்கு ராணுவம் தயாரக இருப்பதாக ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.