பாஜக..பாடாய் படுத்தும் சரத்-கார்த்திக்-கிருஷ்ணசாமி
சென்னை: கூட்டணி விஷயத்தில் தமிழகத்தில் பாஜக பாடதபாடுபட்டு வருகிறது.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாகக் கூறிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் ஆகியோர் பலமுறை கூப்பிட்டும் முறையாகப் பேச்சு நடத்த வரவில்லை.
அதே போல டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகமும் கூட்டணி அமைக்க தயாராக இல்லை. தான் போட்டியிடும் தென்காசி தொகுதியில் மட்டும் பாஜகவின் ஆதரவைக் கேட்கிறார்.
இருப்பினும் இந்த நான்கு கட்சிகளும் கூட்டணி குறித்துப் பேசி வருவதாகக் கூறிக் கொண்டே இருக்கின்றன. ஆனாலும் எந்த முடிவும் ஏற்படவில்லை.
சமத்துவ மக்கள் கட்சியுடன் பேச்சு வார்த்தை தொடருவதாக பாஜக கூறுகிறது. ஆனால், இது குறித்து சரத்குமார் எதுவுமே கூறவில்லை.
இதற்கிடையே சமத்துவ மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சியுடனும் பேசி வருகிறது. ஆனால், பாஜக கூட்டணியில் இணைந்தால் நாங்கள் சேர முடியாது என மனித நேயக் கட்சி சரத்திடம் கூறிவிட்டது.
சரத்தாவது பரவாயில்லை. கார்த்திக்கோ பாஜக, சரத்குமாருடன் ஆகியோருடன் கூட்டணி பேச்சு நடத்தி வருவதாகக் கூறிக் கொண்டே எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படாத நிலையில் 7 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பட்டியலை அறிவித்துவிட்டார்.
இது பாஜக தரப்புக்கு ஷாக். இந் நிலையில் சரத்குமார் சட்டென்று தனது நிலையை தெளிவாக்காவிட்டால் தனித்தே களமிறங்க பாஜகவும் தயாராகிவிட்டது.
சரத், கார்த்திக், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் எடுக்கும் எந்த முடிவையும் 'தாங்கிக் கொள்ள' தயாராகி விட்டது. ஏற்கனவே குறிப்பிட்ட சில தொகுதிகளை தேர்வு செய்து அத்தோடு வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்து டெல்லிக்கு அனுப்பிவிட்டது பாஜக.
நாளைக்குள் கூட்டணி ஏதும் சரிப்பட்டு வராவிட்டால் தனது பட்டியலை வெளியிடவும் அந்தக் கட்சி தயார்.
இதற்கிடையே இன்று மாலைக்குள் யாருடன் கூட்டணி என்பதை சரத்குமார் அறிவித்துவிடுவார் என்கிறார்கள். இன்றோ நாளையோ வேட்பாளர் பட்டியலையும் வெளியிடவுள்ளாராம்.
கூட்டணியோ இல்லையோ சரத்குமார் நெல்லை தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.