கோவையில் ராகிங் கொடுமை-மாணவர் கண்பார்வை பாதிப்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரம். தூக்காடு ஜகாதி பகுதியை சேர்ந்தவர் சுனில் பரமேஸ்வரன். இவர் கேரள சினிமா பட கதாசிரியர். இவரது மகன் அகில்தேவ் (19), கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஎம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
பீளமேட்டில் தனியாக அறை எடுத்து தனது நண்பருடன் தங்கி வருகிறார். இந் நிலையில் அவர் தன்னை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக கூறி கோவை போலீஸ் கமிஷ்னர் மஹாலியை சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அதில்,
நான் பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஎம் முதலாமாண்டு படித்து வருகிறேன். கடந்த மார்ச் 7ம் தேதி இரவு 11 மணிக்கு எனது நண்பர் டோனி என்பவருடன் அறையில் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது எங்கள் கல்லூரியில் படிக்கும் பி.காம் இரண்டாவது ஆண்டு படிக்கும் அஸ்வின், அஜ்மல், அர்ஜுன், பிபிஎம் இரண்டாவது ஆண்டு படிக்கும் மிகாஷில், மூன்றாம் ஆண்டு சமையல் கலை படிக்கும் ஜமீர் ஆகிய 5 பேரும் கதவை உடைத்து அறைக்குள் நுழைந்தனர்.
அவர்கள் எங்களை சரமாரியாக தாக்கினார்கள். அவர்களது அணிந்திருந்த ஷூவை நாக்கால் நக்க சொன்னார்கள். இதற்கு நாங்கள் 2 பேரும் மறுத்து விட்டோம்.
எனவே எனது உதடு, கண், முதுகு ஆகிய பகுதிகளில் கடுமையாக தாக்கினார்கள். இதில் எனது கீழ் உதடு கிழிந்தது. கண்கள் இரண்டும் வீங்கியது. முதுகெலும்பு பாதிக்கப்பட்டது. பின்னர் என்னை தரதரவென்று இழுத்து மாடியில்இருந்து கீழே தள்ளிவிட போவதாக மிரட்டினர்.
இது தொடர்பாக மார்ச் 9ம் தேதி கல்லூரி முதல்வரை சந்தித்து புகார் கொடுத்தோம். ஆனால் கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் தாக்கியதை அடுத்து எனது இரண்டு கண்களும் பயங்கரமாக வலிக்க துவங்கின. இதனால், திருவனந்தபுரம் மருத்துவமனையில் கண் பரிசோதனை செய்தோம்.
பரிசோதனை செய்த டாக்டர்கள் கண்ணின் கருவிழி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கண்பார்வை முற்றிலும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால் எனது பெற்றோர் நிம்மதி இழந்துவிட்டனர். இது போன்ற ராகிங் கொடுமை மற்ற மாணவர்களுக்கு ஏற்படக்கூடாது. ராகிங்செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் ராகிங் செய்த அஸ்வின், அஜ்மல், அர்ஜுன், மிகாஷில் மற்றும் ஜமீர் ஆகிய 5 பேர் மீது அடித்து உதைத்து கொடூர ரத்த காயங்களை ஏற்படுத்துதல், மானபங்கம் செய்தல், (427) அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்குதல், (506) கொலை மிரட்டல் மற்றும் 1997 ராகிங் சட்டம் 4-வது பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
5 மாணவர்கள் நீக்கம்...
இது குறித்து கல்லூரி முதல்வர் ஷீலா ராமச்சந்திரன் கூறுகையில்,
ராகிங் சம்பவம் கல்லூரிக்கு வெளியே நடந்துள்ளது. இருப்பினும் கடந்த மாதம் 9ம் தேதி மாணவர் அகில்தேவ் தந்தை சுனில் பரமேஸ்வரனும், அவரது தாய் ரமாதேவியும் என்னிடம் புகார் மனு கொடுத்தனர். புகார் கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 மாணவர்களும் சஸ்பெண்டு' செய்யப்பட்டனர்.
சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோரையும் அழைத்து கண்டித்தோம். தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு மாணவரின் பெற்றோர் சமரசமாக சென்று விட்டனர்.
ஆனால் அகில்தேவ் பெற்றோர்கள் மட்டும் கல்லூரி நிர்வாகத்தின் பேச்சை கேட்க மறுத்து விட்டார்கள். போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்து விட்டனர். இனி போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.
போராட்டம்: 11 பேர் கைது...
இதற்கிடையே ராகிங் செய்த மாணவர்களை கைது செய்ய வேண்டும், கல்லூரி முதல்வர் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.