ஜெயலலிதாவுடன் பாஜக பேச்சு-அத்வானி
இதனால் ஜெயலலிதாவை நம்பி கூட்டணியில் சேர்த்த மூன்றாவது அணி கலங்கிப் போயுள்ளது.
கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அத்வானி உடன் வந்த நிருபர்களிடம் இதைத் தெரிவித்தார்.
பாஜக அனுப்பிய தூதர்களிடம் ஜெயலலிதா பேசி வருவதாக அந்தக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக அனுதாபியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழக அரசியல் நிலவரங்கள் காரணமாக அக் கட்சியுடனான கூட்டணியை வெளியில் முறித்துக் கொண்டார். ஆனாலும் பாஜகவுடனான அவரது நட்புறவு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூலமாக தொடர்ந்து வருகிறது.
இந் நிலையில் 2 முறை மூன்றாவது அணியில் இணைந்துவிட்டு வெளியில் வந்தார். இப்போது மக்களவைத் தேர்தலையொடடி இடதுசாரிகள் அமைத்த மூன்றாவது அணியில் இணைந்துள்ளார். ஆனாலும் அந்த அணி நடத்தும் பொதுக் கூட்டங்களில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை.
தேர்தலுக்குப் பின் ஜெயலலிதா மட்டமல்ல, மூன்றாவது அணியில் உள்ள எல்லா தலைவர்களுமே எந்தக் கூட்டணிக்கும் தாவத் தயாராக இருப்பவர்களே என்பதே உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அத்வானி,
பாஜக கூட்டணியில் அதிமுகவை சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. தேர்தலுக்குப் பிறகு பாஜக தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங் திறமையற்றவர் என்பதால்தான் கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் அரசு செயலற்று இருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அனுமதியின்றி அவரால் எதையும் செய்ய முடியவில்லை. இதை வெளிப்படையாகவே காணமுடிந்தது.
சந்திரசேகர், தேவ கெளடா போன்றவர்கள் வெறும் 4 எம்பிக்களின் ஆதரவுடன் பிரதமர்களாக இருந்தாலும் தைரியமாக முடிவுகளை எடுத்து வந்தனர். ஆனால் அந்த அதிகாரமும், தைரியமும் சிங்கிடம் இல்லை.
பாஜகவிலும் கூட்டணியிலும் அனைவராலும் எப்போதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைவர் வாஜ்பாய். என்னைவிட அவர் நிறைய அனுபவம் பெற்றவர். அயோத்தி இயக்கத்துக்குப் பிறகே நான் பிரபலம் ஆனேன். அவருடன் என்னை ஒப்பிடுவதே தவறு என்றார் அத்வானி.
'அத்வானி வேறு காரில் செல்ல விருப்பப்படுகிறார்'!:
மத்திய அமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் வேட்பாளர் நவீன் ஜின்டால் ஆகியோர் மீது ஷூ, செருப்பு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் கோவை வந்த பாஜக தலைவர் அத்வானியை வரவேற்க ஷூ, செருப்பு போடாமல் வருமாறு பாஜக தொண்டர்களிடம் போலீசார் கெடுபிடி செய்தனர்.
அத்வானி கேரளா செல்லும் வழியில் கோவை விமான நிலையம் வந்தார். இதையடுத்து அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அத்வானியை வரவேற்க விமான நிலையத்துக்கு ஏராளமான பாஜக தொண்டர்கள் திரண்டு வந்தனர். அவர்களை ஷூ, செருப்புகளை கழற்றிவி்ட்டு வருமாறு போலீசார் கெடுபிடி செய்தனர்.
மேலும் அத்வானியை நெருங்கிவிடாதபடி தொண்டர்களை தூரத்திலேயே நிறுத்தினர்.
இதையடுத்து பாலக்காட்டுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபாலின் காரில் செல்ல அத்வானி விரும்பினார். அதற்கு போலீஸ் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்புக்காக, குண்டு துளைக்காத அம்பாசிடர் காரில் செல்லுமாறு வலியுறுத்தினர்.
இதையடுத்து 'அத்வானி வேறு காரில் செல்ல விருப்பப்படுகிறார்' என்று அவரது உதவியாளர் போலீசாரிடம் கடிதம் தந்தார். இதையடுத்து ராஜகோபாலுடன் அவரது காரில் அத்வானி சென்றார்.
1,000 இந்து மதத் தலைவர்களுக்கு கடிதம்:
இந் நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி பிரதம வேட்பாளர் அத்வானி 1,000 இந்து மதத் lலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் பெயர் கூற விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், நாட்டில் உள்ள பல மடாதிபதிகள், விஷ்வ இந்து பரிஷத் நடத்தும் இயக்கத் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து மதத் தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார் என்றார்.
மூன்று பக்கங்களை கொண்ட அந்த கடிதத்தில் ராமராஜ்யம் அமைப்பது, ராமர் பாலத்தை காப்பது, மத சம்பந்தமானவற்றுக்கு வரிவிலக்கு அளிப்பது, இந்தியாவுக்கு வரும் ஆன்மீக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அமர்நாத் கோயில் நில பிரச்சனை ஆகியவை குறித்து அத்வானி குறி்ப்பிட்டுள்ளார்.
அதே போல பிற மதத் தலைவர்களுக்கும் அத்வானி கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அதில் மேற்கூறிய விஷயங்கள் இடம் பெறவில்லை.