உடனே விலக விரும்புகிறேன்! -கிரன் கார்னிக்
சத்யம் நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை ரூ. 2890-க்கு (வெளிச் சந்தையில் வாங்கவிருக்கும் 20 சதவிகித பங்குகளுக்கான மதிப்பும் சேர்த்து) வாங்கியுள்ளது டெக் மஹிந்திரா நிறுவனம்.
இதனைத் தொடர்ந்து சத்யம் நிறுவனத்தின் புதிய அதிபராகிறது டெக் மஹிந்திரா. நிர்வாகம் இனி இவர்கள் வசமே.
தற்போது அரசு நியமித்த இயக்குநர் குழுதான் சத்யம் நிர்வாகத்தை கவனிக்கிறது. இந்த நிர்வாகக் குழுவின் தலைவராக கிரன் கார்னிக் உள்ளார்.
சத்யம் பெரும்பான்மைப் பங்குகள் கைமாறியதைத் தொடர்ந்து கிரன் கார்னிக் அளித்த பேட்டி:
"இப்போதுதான் நிம்மதியாக உணர்கிறேன். சத்யம் நிர்வாகப் பொறுப்பை எவ்வளவு சீக்கிரம் முடியுமா அவ்வளவு சீக்கிரம் டெக் மஹிந்திரா வசம் ஒப்படைத்துவிட்டு, வெளியேறிவிட வேண்டும் என்பதே என் விருப்பம். இனி இந்த ஷோவை அவர்கள் நடத்தட்டும். புதிய நிர்வாகத்துக்கு இப்போதே வாழ்த்துக்களைச் சொல்லி வைக்கிறேன்", என்றார் கிரன் கார்னிக்.
மூன்று மாத வருவாய் ரூ.2000 கோடி!!
மேலும் அவர் கூறுகையில், "சத்யம் இப்போதும் நல்ல நிறுவனம்தான். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் அந்த நிறுவனம் ரூ.2000 கோடியை வருவாயாகப் பெற்றுள்ளது. காரணம் அவர்களுக்குள்ள வாடிக்கையாளர் பலம் அப்படி. சத்யம் நிறுவனத்தை நடத்த வேறு நிதி உதவிகள் கூடத் தேவை இல்லை. இந்த வருவாய் தொடர்ந்தாலே போதும், நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கும். இப்போது தேவை வலுவான நிலையான நிர்வாகம் மட்டுமே. அரசு எங்களுக்களித்த பொறுப்பை சரியாக நிறைவேற்றிவிட்டோம்," என்றார்.
சில வழக்கமான நடைமுறைகளை முடித்த பிறகு ஏப்ரல் 21-ம் தேதி அல்லது அதற்குப் பிந்தைய நாளில் சத்யம் நிறுவனத்தை முழுமையாக டெக் மஹிந்திரா ஏற்கும் எனத் தெரிகிறது.