அடுத்த ஆட்சி..தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும்-ஆய்வு
இந்தத் தொலைக்காட்சி பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து கருத்தாய்வு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
காங், பாஜக, 3வது அணி-வாக்கு சதவீதம்:
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 222 இடங்களிலும் பாஜக கூட்டணி 189 இடங்களிலும் இடதுசாரிகள் உள்ளிட்ட பிற கட்சிகள் 119 இடங்களிலும் வென்றன.
ஆனால், இந்த இரு கூட்டணிகளும் பெற்ற வாக்கு தலா 36 சதவீதமாகும். சரிசமமான அளவில் வாக்குகளைப் பெற்றாலும் அதிக இடங்களை காங்கிரஸ் கூட்டணி வென்றது.
இப்போது பல கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் கணக்கில் இரு கூட்டணிகளின் வாக்கு சதவீதமும் 30 சதவீதத்துக்குக் கீழ் போய்விட்டது தெரிகிறது. இந்த இரு கூட்டணிகளுக்கும் தலா 25 முதல் 30 சதவீதமும் மூன்றாவது அணிக்கும் அதே அளவும் வாக்கு சதவீதம் இருப்பது தெரிகிறது.
யாருக்கு எந்த மாநிலம் கைகொடுக்கும்?:
இதுவரை வந்துள்ள கருத்துக் கணிப்புகளின்படி காங்கிரசுக்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, கேரளா, மகாராஷ்டிரமும், பாஜகவுக்கு குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், கர்நாடகம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களும் கை கொடுக்கலாம்.
இந் நிலையில் அடுத்த ஆட்சியை நிர்ணயி்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போவது தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், பிகார் ஆகியவையே.
தொகுதி மறுவரையால் யாருக்கு லாபம்?:
தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டதில் நாடு முழுவதும் 95 தொகுதிகள் நகர்ப்புற தொகுதிகளாக மாறிவிட்டன. இங்கு கிராமப் பகுதி வாக்குகளைவிட நகர்ப் பகுதி வாக்குகளே அதிகம். வழக்கமாக நகர்ப் பகுதிகளில் அதிக வாக்குகளைக் கொண்ட பாஜக, இது தனக்கு சாதகமாக அமையும் என்று கருதுகிறது.
ஆனால், 2004ம் ஆண்டில் நகர்ப் பகுதிகளிலும் காங்கிரஸ் அதிக இடங்களை வென்றதால் இம்முறையும் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் அந்தக் கட்சி நினைக்கிறது.
கடந்த தேர்தலில் ஆந்திரா, தமிழகத்தில் கிடைத்த மாபெரும் வெற்றி காங்கிரஸ் கூட்டணிக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்த இழப்புகளை கேரளா, மேற்கு வங்கத்தில் சரி செய்துவிடலாம் என காங்கிரஸ் கருதுகிறது.