அமைதி முயற்சி: இனி நார்வேக்கு இடமில்லை-இலங்கை
கொழும்பு: அமைதி முயற்சிகளுக்கான பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றில் இனி நார்வே நாட்டுக்கு இடமில்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
சமீபத்தில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இலங்கைத் தூதரகத்தை தமிழர்கள் பெரும் திரளாக திரண்டு சென்று தாக்கி சேதப்படுத்தி சூறையாடினர்.
இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்தது. ஏற்கனவே, தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றிடம் எடுத்துச் சொல்லி அவர்களை இலங்கை அரசைக் கண்டிக்க வைத்ததில் நார்வே முக்கிய பங்கு வகித்தது. இதனால் இலங்கை அரசு ஏற்கனவே கடுப்பில் இருந்து வந்தது.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் அல்லது விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் இடையில் ஒரு நடுநிலையாளராக இருந்து சமாதான முயற்சிகளை எடுத்து வந்தது நார்வே.
வன்னியில் உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனுக்கும், ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி ஜான் ஹோம்ஸுக்கும் இடையே பேச்சு நடைபெற நார்வேதான் மத்தியஸ்தம் செய்தது.
இதுவும் இலங்கை அரசை கோபத்தில் ஆழ்த்தியது. இதை விட உச்சகமாக, நார்வே மூலமாக அமெரிக்க அரசுத் தரப்பில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையும் நடந்தேறியது. இதனால் கடும் கோபத்தில் ஆழ்ந்திருந்தது இலங்கை.
இருப்பினும் நார்வேயின் சமரச முயற்சிகளை அதனால் முறித்துக் கொள்ளவோ, கடுமையாக நடவடிக்கை எடுக்கவோ முடியாத நிலையில் இருந்தது.
இந்த நிலையில், ஓஸ்லோவில் தூதரகம் தாக்கப்பட்டதை சாக்காகக் கொண்டு தற்போது மத்தியஸ்த முயற்சிகளிலிருந்து நார்வே நாட்டை நீக்குவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்தியஸ்தராக தொடருவதற்கு நார்வேக்கு இனியும் அருகதை இல்லை. நார்வே நாட்டை மத்தியஸ்த முயற்சிகளிலிருந்து நீக்குவது தொடர்பான கடிதம், அந்நாட்டுத் தூதரிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
2000 ஆம் ஆண்டு முதல் இலங்கை இனப்பிரச்சினையில் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் நார்வே ஈடுபட்டுள்ளது. அந்த நாட்டின் மத்தியஸ்த்தின் விளைவாகவே இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைதி உடன்படிக்கை கையெழுத்தானது.
ஆனால் இதை தன்னிச்சையாக கடந்த ஆண்டு இலங்கை அரசு முறித்துக் கொண்டு விட்டது. அதனைத் தொடர்ந்து தமிழர் பகுதிகளில் தீவிர ராணுவ நடவடிக்கைகளி்ல் அது இறங்கியது.
இதனையடுத்து சண்டை முற்றவே நார்வே அமைதித் தூதர்கள் இலங்கையிலிருந்து வெளியேறினர்.
தற்போது நார்வே அமைதி முயற்சிகளிலிருந்து முழுமையாக விரட்டி விடும் நடவடிக்கையாக மத்தியஸ்த நடவடிக்கைகளில் இனி நார்வேக்கு இடம் இல்லை என இலங்கை கூறியுள்ளதாக கருதப்படுகிறது.