நெல்லையில் ராட்சத முரசு-தேமுதிகவினர் உற்சாகம்
நெல்லை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்கும், தங்களது முரசு சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்கவும் நெல்லையில் ராட்சத முரசு ஒன்றை தேமுதிக உருவாக்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் பொதுவான சின்னம் இல்லாமல் கிடைத்த சின்னத்தில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு இம்முறை தேர்தல் ஆணையம் அவர்கள் கேட்ட முரசு சின்னத்தை வழங்கி உற்சாகம் தந்துள்ளது.
இந்நிலையில் தேமுதிகவினர் தங்களது கட்சி சின்னமான முரசை மக்கள் மனதில் நன்கு பதிய வைக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் திரைப்பட கலைஞர்கள் கைவண்ணத்தில் உருவான இந்த ராட்சத முரசு நெல்லை தொகுதி முழுவதும் மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளது. இதற்காக மினி லாரியின் பின்பக்கத்தில் முரசு வைக்கப்பட்டுள்ளது. இந்த முரசின் உயரம் 4 அடியாகும். சுற்றளவு 8 அடி என்கின்றனர் தேமுதிகவினர்.
இந்த ராட்சத முரசு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் இரவில் முரசு மட்டும் பளிச் என தெரியும். மேலும் இந்த வாகனத்தில் தேமுகவினர் சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கை ஓலி பெருக்கி முலம் அறிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே இது வித்தியாசமான பிரசாரமாக இருக்கும் என மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் தெரிவித்தார்.