எனக்கு பிரதமராக ஆசையில்லை-ஜெயலலிதா
டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
நாங்கள் பாமக, சிபிஎம், சிபிஐ, மதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். இந்தக் கூட்டணியின் லட்சியமே மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் என்று கூறிய ஜெயலலிதாவிடம்,
தேர்தலுக்கு பின் வேறு கட்சியுடன் (பாஜக) கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, ஒரு நல்ல அரசியல்வாதி எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விட மாட்டார், அதனால் அம்மாதிரியான கூட்டணி அமைக்க வேண்டியபட்சத்தில் தோழமை கட்சிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். ஆனால் இப்போது அது குறித்து பேசுவது பொறுத்தமாக இருக்காது.
நான் அமைத்துள்ள கூட்டணி தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மாபெரும் வெற்றி பெறும் என்றார்.
வைகோ தேச விரோதமாக பேசவில்லை...
இலங்கை விவகாரத்தில் வைகோ தெரிவித்து வரும் கருத்துக்கள் குறித்த கேள்விக்கு,
வைகோ எப்போதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி தான் வந்திருக்கிறார். முன்பு அவர் காங்கிரஸ், பாஜக கூட்டணிகளில் இருந்தபோது அவரது பேச்சு குறித்து யாரும் சர்ச்சையைக் கிளப்பவில்லை. இப்போது மட்டும் அதை எழுப்ப வேண்டிய தேவை?. வைகோ தேச விரோதமாக ஏதும் பேசவில்லை.
இலங்கை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு படுமோசம். அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க அவர்கள் தவறிவிட்டனர். இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
நீங்கள் பிரதமராக திட்டம் போடுவதாகத் தெரிகிறதே என்ற கேள்விக்கு, எனக்கு பிரதமர் பதவி மேல் ஆசையே இல்லை. நம் நாடு வளம் பெற வேண்டும், சூப்பர் பவர் என்ற நிலையை அடைய வேண்டும் என்பதே என் ஆசை என்று கூறியுள்ளார்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை:
இதற்கிடையே இன்று டாக்டர் அம்பேத்காரின் 119வது பிறந்த நாளையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்.