துரோகிகளை தூக்கி எறிவோம் - உரிமைகளை மீட்போம்- தமிழினம் வாழ வழி வகுப்போம்: ஜெ.
சென்னை: சர்வாதிகாரி ஆண்டு தீவிரவாத ஆண்டாய், பொருளாதார சீரழிவு ஆண்டாய், தமிழினத்தை அழிக்கும் ஆண்டாய் வந்து சென்றது. இன்று பிறக்கும் விரோதி ஆண்டில் சுயநல துரோகிகளை தூக்கி எறிவோம், உரிமைகளை மீட்போம், தமிழினம் வாழ வழி வகுப்போம் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழ் புத்தாண்டையொட்டி ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி..
பூக்கள் பூத்துக் குலுங்கும் தமிழ் புத்தாண்டு திருநாளில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் என் அகம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
சர்வதாரி ஆண்டு தீவிரவாத ஆண்டாய், பொருளாதார சீரழிவு ஆண்டாய், தமிழினத்தை அழிக்கும் ஆண்டாய் வந்து சென்றது. இன்று பிறக்கும் விரோதி ஆண்டு வளமிக்க ஆண்டாய் மலர்ந்து, தமிழக மக்களின் வாழ்வில் அமைதி தழைக்கவும், செல்வம் செழிக்கவும், மகிழ்ச்சி பொங்கவும் வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்த புத்தாண்டில், ஊக்கமுடன் உழைப்போம்! தடைகளை தகர்த்தெறிவோம்! சுயநலத் துரோகிகளை தூக்கி எறிவோம்! உரிமைகளை மீட்போம்! தமிழினம் வாழ வழி வகுப்போம்! என்று சூளுரைத்து தரணி வாழ் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்வதில் உவகை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.