தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வராது-திருநாவுக்கரசர்
பரமக்குடி: நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை என பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களில் பாஜக 12ல் போட்டியிடுகிறது. திருநாவுக்கரசர் ராமநாதபுரத்தில் களமிறங்குகிறார். இது குறி்த்து பரமக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு தீவிரவாதம், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மத்திய அரசு பலவீனமாக உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு பாஜக தலைமையில் உறுதியான ஆட்சி அமையும். இன்றைய சூழ்நிலையில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது. மூன்றாவது அணியில் உள்ள சில கட்சிகளுடன் இணைந்து பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. வரும் 17ம் தேதி பரமக்குடியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகின்றது. அதற்கு பின்பு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளேன் என்றார்.