கடும் வார்த்தைப் போர் எதிரொலி - பிரதமர் கொடுத்த விருந்தை புறக்கணித்தார் அத்வானி
பலவீனமான பிரதமர் என்று மன்மோகன் சிங்கை கடுமையாக சாடி வருகிறார் அத்வானி. அதற்கு மன்மோகன் சிங்கும் கடுமையான முறையில் பதிலடி கொடுத்து வருகிறார்.
காந்தஹார் விவகாரத்தை எழுப்பி அத்வானியை கிடுக்கிப் பிடி பிடித்து வருகிறார்.
இதனால் இரு தலைவர்களுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
இந்த நிலையில், லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு பிரதமர் மன்மோகன் சிங், தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரியாவிடை விருந்தளித்தார்.
இதில் கலந்து கொள்ள அத்வானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டார்.
விருந்தில், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ், பொதுச் செயலாளர் அமர்சிங், அகாலிதள தலைவர் தின்சா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல சிபிஎம் தலைவர்கள் பிரகாஷ் காரத், சீதாராம் எச்சூரி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டும் அவர்களும் வரவில்லை. மன்மோகன் அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு முன்பாக சிபிஎம்.மிலிருந்து சோம்நாத் நீக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
முன்னாள் பிரதமர் குஜ்ரால், சட்ட அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ், முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மூத்த காங்கிரஸ் தலைவர் கரன் சிங் ஆகியோரும் விருந்தில்க லந்து கொண்டனர்.