உதயசூரியன் தாலி - விருத்தாச்சலம் அருகே வினோத கிராமம்
விருத்தாச்சலம்: பெண்கள் புனிதமாக கருதும் தாலியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தைப் பதிக்கும் வினோத கிராமம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தாலியில் தங்களது குடும்ப தெய்வங்களை பதிப்பது தமிழக மக்களின் வழக்கம். ஆனால் விருத்தாச்சலம் அருகே உள்ள எம். பட்டி கிராம மக்கள் இதில் வித்தியாசப்படுகிறார்கள்.
இந்தக் கிராமமே தீவிர திமுகவினரைக் கொண்டதாகும். இங்குள்ள பெண்களுக்கு ஆண்கள், தாலியில், உதயசூரியன் சின்னத்தைப் பதிக்கும் பழக்கம் நெடுங்காலமாக உள்ளது.
இங்குள்ள திருமணமான பெண்களின் கழுத்தில் தொங்கும் தாலியில் உதயசூரியன் சின்னம் தவறாமல் இடம் பெற்றிருக்கும்.
கட்சியின் மீதும், உதயசூரியின் மீதும் கொண்ட அன்பால், தங்களது கிராமத்தில் நடைபெறும் திருமணங்களில் தாலியில், கண்டிப்பாக உதயசூரியன் சின்னத்தைப் பதித்து வருகிறார்கள் இந்த ஊர் ஆண்கள்.
இன்று நேற்றல்ல, 1957ம் ஆண்டு (திமுகவுக்கு அப்போதுதான் உதயசூரியன் சின்னம் கிடைத்தது) முதலே இந்தப் பழக்கம் இருந்து வருகிறதாம்.
எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர்தான் இதை ஆரம்பித்து வைத்தார். அன்றஉ முதல் கடந்த 3 தலைமுறையாக இது அங்கு நடைமுறையில் உள்ளது.
தற்போது சுப்ரமணியனுக்கு 74 வயதாகிறது. 1952ம் ஆண்டு இவர் திமுகவில் சேர்ந்தார். அவர் அறிமுகப்படுத்தி வைத்த உதயசூரியன் தாலி இன்று இக்கிராமத்தில் நிரந்தரமாகி விட்டது.
கருணாநிதியும், கண்ணதாசனும், சுப்ரமணியனுக்கு இரு கண்கள் போலவாம். இருவரின் பேச்சும், எழுத்தும் தன்னை வெகுவாக கவர்ந்ததாக கூறும் சுப்ரமணியன், உதயசூரியன் பொறித்த தாலிகளை அறிமுகப்படுத்தியதற்காக பெருமைப்படுவதாக கூறினார்.
தற்போது எம்.பட்டி கிராமத்தில் உள்ள பெரும்பாலான பெண்களின் (வெளியூர்ப் பெண்களின் கழுத்தில் வழக்கமான தாலியே இருக்கிறது) கழுத்தில் தொங்கும் தாலிகளில் உதயசூரியன் பட்டொளியுடன் பிரகாசிப்பதை காண முடியும்.