விழுப்புரம் வி.சிறுத்தை வேட்பாளர் மாற்றம்: வேலாயுதத்துக்கு பதில் சாமிதுரை
சென்னை: விழுப்புரம் தனி தொகுதிக்கான தனது கட்சியின் வேட்பாளரை மாற்றியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எஸ்.பி.வேலாயுதத்திற்குப் பதிலாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சாமிதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேலாயுதம் மீது ரூ. 171 கோடி மோசடிப் புகார் எழுந்துள்ளது குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இந்த வேட்பாளரை திருமாவளவன் மாற்றுவார் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வேலாயுதத்தின் மீது பிரசாத் கொனேரு என்பவர் தொடர்ந்த வழக்கில், கோயம்பேடு போன்ற பல்வேறு இடங்களில் நிலங்கள் வாங்குவதற்காக பல்வேறு கட்டங்களில் வேலாயுதத்திடம் ரூ. ரூ.171 கோடி கொடுத்தாகவும், ஆனால், பணத்தையும் தரவில்லை, நிலமும் வாங்கித் தரவில்லை என்றும், இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வேலாயுதத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாற்றக் கூடும் எனத் தெரியவந்தது.
இந் நிலையில் அவரை மாற்றி விட்டு சாமிதுரையை வேட்பாளராக அறிவித்துள்ளார் திருமாவளவன். மேலும் புதிய வேட்பாளர் சாமிதுரையுடன் அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியையும் திருமாவளவன் சந்தித்தார்.
பின்னர் வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில்,
வேலாயுதம் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பால் அவர் தேர்தலில் போட்டியிட சட்ட சிக்கல் எதுவும் இல்லையென்றாலும், அவர் தாமாகவே முன் வந்து கட்சியின் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு தாம் போட்டியிட விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து வேட்பாளரை மாற்றியிருக்கிறோம் என்றார்.