தலிபான்கள் அட்டகாசம்-பாக் சீக்கியர்களுக்கு வரி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பழங்குடியினர் பிராந்தியமான அவுர்சக்சாய் என்ற பகுதியில் வசிக்கும் சீக்கிய சிறுபான்மையினர் தலிபான் தீவிரவாதிகளுக்கு வரி கட்டி உயிர் பிழைத்து வருகின்றனர்.
அவுர்சக்சாய் பிராந்தியம் பெஷாவருக்கு அருகே உள்ளது.
இப்பிராந்தியம் தலிபான்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. இங்கு வசிக்கும் சீக்கியர்கள் வரி கட்ட வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
முதலில் சீக்கியர்கள் வரி கட்டாமல் இருந்தனர். இதையடுத்து அங்கு வந்த தலிபான்கள், சில சீக்கியர்களை அடித்து உதைத்து வீடுகளைக் கைப்பற்றிக் கொண்டனர். மேலும் சீக்கிய தலைவர் ஒருவரையும் கடத்திச் சென்று விட்டனர்.
இதையடுத்து வரி கட்ட முன்வந்தனர் சீக்கியர்கள். அதன்படி ரூ. 2 கோடியை வரிப்பணமாக செலுத்தியுள்ளனராம்.
இஸ்லாமிய சட்டப்படி இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் வரி கட்ட வேண்டும் என தலிபான்கள் கூறுகின்றனர். ரூ. 5 கோடியை வரியாக கேட்டனர். ஆனால் 2 கோடி பணம் மட்டுமே தங்களால் தர இயலும் என சீக்கியர்கள் கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டு அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டனராம்.
வியாழக்கிழமை இந்தப் பணம் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆக்கிரமித்திருந்த சீக்கியர்களின் வீடுகளை விட்டு தலிபான்கள் வெளியேறியுள்ளனர். மேலும் கடத்தப்பட்ட சீக்கிய தலைவரான சைவாங் சிங்கையும் விடுவித்து விட்டனர்.
வரி கட்டியதைத் தொடர்ந்து அவுர்சக்சாய் பிராந்தியத்தின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக நடமாடலாம், எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் என சீக்கியர்களை தலிபான்கள் அனுமதித்துள்ளனராம். மேலும் சீக்கியர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்வோம் எனவும் தலிபான்கள் உறுதியளித்துள்ளனராம்.
மேலும், தங்களுக்குப் பயந்து வேறு பகுதிகளுக்குச் சென்ற சீக்கியர்களும் மீண்டும் தங்களது வீடுகளுக்குத் திரும்பலாம் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனராம்.