மாயாவதி குறித்து கமெண்ட்-சிக்கலில் சஞ்சய் தத்!
கோஸி: உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி குறித்து செக்ஸியாக கமெண்ட் அடித்ததாக நடிகரும் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளருமான சஞ்சய் தத் மீது மாவ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரடாகர் நீதிமன்றம் இதுகுறித்து தத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது இதனால் தத் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று உபி மாநிலம் கோஸி தொகுதியில் உள்ள பிரடாகரில் நடந்த தேர்தல் பேரணியில் சஞ்சய் தத் பேசும் போது, மாயாவதியை கட்டிப் பிடித்து முத்தம் தர விரும்புகிறேன். அவருடைய நிர்வாகத்தில் குழாய்கள் இருக்கும், குடிநீர் வராது. பல்புகள் இருக்கும், மின்சாரம் இருக்காது. மருத்துவமனைகள் இருக்கும், படுக்கைகள் இருக்காது, என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் பேசுகையில், என்னை போலீசார் மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். மூன்றாம் தரமாக நடத்தினார்கள். காரணம் நான் ஒரு முஸ்லிம் தாய்க்கு மகன் என்பதால் என்றார்.
அவரது இந்தப் பேச்சை எதிர்த்து மாவ் போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சஞ்சய் தத்துக்கு பிரடாகர் நீதிமன்றம் நோட்டீசும் அனுப்பியுள்ளது. ஆனால் இதுகுறித்து சஞ்சய் தத் விளக்கம் எதுவும் தரவில்லை.
மதம் சார்ந்தோ, தனிப்பட்ட முறையிலோ அல்லது உணர்வுகளைத் தூண்டும் விதத்திலோ தேர்தல் பிரச்சாரத்தில் பேசக்கூடாது என்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் கூறுகின்றன. இவற்றை சஞ்சய் தத் அப்பட்டமாக மீறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.