நளினி விடுதலை கோரும் வழக்கு-சிபிஐக்கு நோட்டீஸ்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, அவரது கணவர் முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், மத்திய அரசு ஜெயின் கமிஷனை அமைத்து ராஜீவ் கொலையில் சதியின் பின்னணி பற்றி விசாரணை நடத்தப்பட்டது. ஜெயின் கமிஷன் அளித்த இறுதி அறிக்கையில், ஆயுத வியாபாரி சந்திராசாமி உள்ளிட்டோரை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது.
இதன் அடிப்படையில் சிபிஐ கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகிறது.
பொதுவாக ஒரு கமிஷன் அறிக்கை அளிக்கப்பட்ட பிறகுதான் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி 26 பேருக்கு தடா சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை வாங்கி கொடுத்தது.
உச்சசநீதிமன்றத்தில் நளினி உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை உறுதி செய்யப் பட்டது. மற்றவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதில் நளினி தாக்கல் செய்த கருணை மனுவை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
ஜெயின் கமிஷன் அறிக்கை மீது மேல் விசாரணை நடைபெற்ற போது கடந்த 18 ஆண்டுகளாக நளினி உள்ளிட்ட 7 பேர் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
எனவே இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை அவர்களுக்கு இடைக்கால ஜாமீன் அளித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்று வேலுச்சாமி கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் தர்மாராவ், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கருப்பன் ஆஜரானார்.
அப்போது, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா என்பது குறித்து சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். திங்கள்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.