இலங்கையுடன் உறவை துண்டிக்க கருணாநிதி கோரிக்கை
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ள அவசர தந்தி:
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள வேண்டுகோளை நன்றியுடன் வரவேற்கிறோம். இந்தப் போர் நிறுத்த வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளாமல், நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் இலங்கையுடன் அனைத்து தூதரக உறவுகளையும் இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.
பிரணாப் முகர்ஜி கோரிக்கை..
முன்னதாக பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கை தமிழர்களின் நிலைமை குறித்து இந்தியா மிகுந்த கவலை அடைந்துள்ளது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இதை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்.
பாதுகாப்பு பகுதியில் ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது. பாதுகாப்புப் பகுதியில் உள்ள தமிழர்களின் நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கிக்கொண்டுள்ள தமிழர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு 2 நாட்கள் போர்நிறுத்தம் அறிவித்ததை இந்தியா வரவேற்கிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ள மக்கள் பாதுகாப்புடன் வெளியேறும் வகையில், போர் நிறுத்தத்தை அரசு நீடிக்க வேண்டும். மக்கள் வெளியேற விடுதலைப் புலிகளும் அனுமதிக்க வேண்டும்.
இலங்கை பிரச்சனையில் இந்தியா மத்தியஸ்தில் ஈடுபடாது. இந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். தங்கள் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இனப் பிரச்சனைக்கு இலங்கை அரசு தீர்வு காண வேண்டும்.
இந்தியா அனுப்பி வைத்துள்ள 62 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் புல்மூட்டை என்ற இடத்தில் உள்ள முகாமில் 1,500க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை இந்தியா ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ மேலும் 40 ஆயிரம் மூட்டை உதவிப் பொருட்களை விரைவில் இந்தியா அனுப்பி வைக்க இருக்கிறது.
இலங்கை தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை அரசும் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் இந்தியாவின் கோரிக்கை ஏற்று நடப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருந்தார் பிரணாப்.